அண்ணன் தம்பி கதையில் நன்மை – தீமைக்கு இடையில் நடக்கும் மோதலை சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.

கதிர் – பிரபு (இரட்டை வேடங்களில் தனுஷ்) இருவரும் அண்ணன் தம்பி. அண்ணன் கதிர் மோசமானவன், தம்பி பிரபு நல்லவன். சிறுவயதிலேயே கதிரால் ஊருக்குள் பல பிரச்சனைகள். அது பிரபுவின் உயிருக்கு பாதிப்பாக வந்து விடுமோ என பயந்து, கதிரை நிர்கதியாய் விட்டு பிரபுவை மட்டும் வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறார் அவர்களது தாய். இருபது வருடங்கள் கழித்து மனைவி (இந்துஜா), மகள் சத்யா (ஹியா தவே) உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் பிரபு.

image

ஒரு விடுமுறைக்கு சுற்றுலா சென்று வந்த பிறகு மகளுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்தப் பிரச்சனை சரியாக, பிரபு மீண்டும் கதிரை சந்திக்க வேண்டும் என்ற சூழல். மகளுக்கு என்ன பிரச்சனை? அதை பிரபு சரி செய்தாரா? மீண்டும் அண்ணன் – தம்பி சந்திக்கும் போது என்ன ஆகிறது? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

image

Good vs Evil என்ற செல்வராகவனின் பிரதான களம் தான் இந்தப் படத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக தீமையுள் இருக்கும் இருள் படர்ந்த பக்கங்களைப் பற்றி தன்னுடைய படங்களில் செல்வராகவன் பேசி இருப்பதை கவனிக்க முடியும். அதை இந்த முறை ஒரு அண்ணன் – தம்பியை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்.

image

படத்தின் முதல் மற்றும் முக்கியமான பாசிடிவ், தனுஷின் நடிப்பு. அப்பாவி பிரபுவாக, அசுரத்தனமான கதிராக என இரு கதாபாத்திரங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகளுக்காக கலங்குவது, பயந்து பயந்து அவளைப் பாதுகாப்பது, கதிரின் பெயர் கேட்டதும் நடுங்குவது என ஒரு பக்கம், மிகக் கொடூரமாக கொலைகளை செய்யும் கதிராக இன்னொரு பக்கம் இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறார். துணைப் பாத்திரங்களில் வரும் பிரபு, இந்துஜா, எல்லி அவ்ரம், ஹியா தவே, ஆகியோர் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

image

யுவனின் பின்னணி இசை படத்தின் தன்மையை உணர்த்தும் படி அமைந்திருக்கிறது. குறிப்பாக கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அந்தக் குரூரத்தை உணர்த்தும்படி ஒலிக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதிரின் காட்சிகளில் அந்த கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் படியாக அமைந்திருந்தது.

image

செல்வராகவனின் முந்தைய படங்களில் இருக்கும் எக்ஸ்பரிமெண்ட் தன்மை இந்தப் படத்திலும் இருக்கிறது. நன்மை தீமை இடையேயான போட்டி? எது நன்மை, எது தீமை என்பதைப் பற்றிய தேடல் அவரது படங்களில் உணர முடிகிறது. ஆனால் அது இந்தக் கதைக்குள் எந்த ஒரு இடத்தில் இருந்தும் வெளிப்படவில்லை என்பதுதான் பிரச்சனையே.

முதல் பாதியில் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என நமக்கு எழுந்த ஆர்வம், இரண்டாம் பாதி கதை துவங்கியவுடன் படார் என கீழே விழுகிறது. மேலும் கதைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் மூட நம்பிக்கை சார்ந்த அமானுஷ்ய விஷயங்களும் எந்த அழுத்தமும் இல்லாமல் சொல்லப்படுகிறது. அதனாலேயே எந்த நம்பகத் தன்மையும் இல்லாமல் நகர்கிறது காட்சிகள். பிரபு, கதிர் என்ற முக்கியமான இரண்டு பாத்திரங்களும் எந்த ஆழமும் இல்லாமல் மிக தட்டையாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

image

சிறப்பான விதத்தில் தொடங்கப்படும் கதை, இடைவேளைக்குப் பிறகு மிகவும் தடுமாறுகிறது. மிகக் குறிப்பாக கதிர் கதாபாத்திரம் என்ன விதமானது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எதற்காக அவர் மனித வேட்டையாடுகிறார்? அதைத் தொடர்ந்து அவர் வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் என எதுவும் கதையுடன் ஒட்டாமல் இருக்கிறது. படத்தின் இறுதியில் “நீயே பொழைச்சிட்ட” என ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனம் உட்பட மிக சொற்பமான இடங்களில் செல்வராகவனின் சுவாரஸ்யமான எழுத்து தென்படுகிறது. மற்றபடி மிகவும் வழக்கமான ஒரு படமாக உருவாகியிருக்கிறது `நானே வருவேன்’.

image

அண்ணன் – தம்பி, நல்லவன் கெட்டவன், நன்மை – தீமை, உளவியல் ரீதியான பாதிப்பு எனப் பல விஷயங்கள் பேச நினைத்தது புரிகிறது. ஆனால், அதை சரிவர திரையில் கொண்டு வராததால், கடைசி வரை இது என்ன மாதிரியான படம் என்ற குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது.

-ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.