திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சு குறித்து பாஜக மற்றும் அதிமுக தரப்பில் தொடர்ச்சியாக கண்டனங்கள் எழுப்பட்டு வரும் நிலையில், திமுக அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்.

திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி. ஆ.ராசா பேசும்போது இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன், இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என மனுதர்மம் குறித்தும் சனாதனம் குறித்தும் பேசியிருந்தார்.

image

அவரின் இந்த பேச்சுக்கு வலதுசாரி அமைப்புகள் தொடர்ச்சியாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. பாஜக உடன் திராவிட கட்சியாக அதிமுகவும் ஆ.ராசாவின் பேசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறது. ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம், கடையடைப்பு, காவல் நிலையங்களில் புகார் கையெழுத்து இயக்கம் என தங்கள் தரப்பு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆ.ராசாவின் பேச்சிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

பாஜக, இந்து அமைப்புகள், அதிமுகவினர் என பலரும் பலவகையில் ஆ.ராசாவின் பேச்சிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தாலும் திமுக தரப்பில் இருந்து ஆ.ராசாவின் கருத்தை ஆதரித்தோ எதிர்த்தோ எந்த பதிலும் இதுவரை வரவில்லை, திமுக தலைவரோ, தலைமை கழக நிர்வாகிகளோ கப்சிப் என அமைதிகாத்து வருகின்றனர். அமைச்சர் மனோ தங்கராஜ் மட்டும் தன்னுடைய கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு முன்பு ஆ.ராசா மாநில சுயாட்சி குறித்து பேசியதை தேசிய அளவில் பாஜக விவாத பொருளாக்கியது. அப்பொழுதும், இதேபோன்றுதான் நடந்தது. 

ஆ.ராசாவின் கருத்துக்கு திமுகவின் நிலைப்பாடு என்ன? ஏன் இந்த அமைதி? ஏன மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் மற்றும் அரசியல் விமர்சகர் அய்யநாதன் ஆகியோரிடம் பேசினோம் அவர்களின் கருத்தை இங்கு விரிவாக பார்க்கலாம்…

image

ப்ரியன் பேசும் போது.. ”நான் சொன்னதில் என்ன தவறு இருக்கு, மனுதர்மத்தில் என்ன இருக்கோ அதைத்தான் சொன்னோன் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராசா அவருடைய பேச்சுக்கு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். அவர் விடுதலை பத்திரிகையின் விழாவில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியல் மனுதர்மம் குறித்து பேசுவது இயல்புதான் அதனால் அங்கே ராசா பேசியிருக்கிறார். சாதாரணமாக திரவிட கழக கூட்டங்களில் பேசுகிற விசயம்தான் இது,

ஆ.ராசா பேசிய கருத்து மனுதர்மத்தில் இல்லை என்று சொல்ல முடியாது. அதில் இருக்கிறது அதனால் பேசியிருக்கிறார். அது நடைமுறையில் இருக்கிறதா இல்லையா என்பது அடுத்த கேள்வி?. ஆனால் அவர் பேசிய கருத்துகள் அதில் இருக்கிறது என்பது உண்மை. ஜாதி வேறுபாடுகள் இன்னும் பல இடங்களில் இருக்கதான் செய்கிறது. தென்காசி பாஞ்சாங்குளம் கிராமத்தில் நடந்த தீண்டாமை சம்பவம், அதேபோல திண்டுக்கல்லில் ஒரு அம்மா, எஸ்சி-க்கு நான் வீடு கொடுக்கமாட்டேன் குலதெய்வம் கோபித்துக் கொள்ளும் என்று சொன்னது. இந்து சமயத்துக்குள்ள ஜாதி கிடையாது என்றால் இதெல்லாம் எதை காட்டுது.

image

அந்த காலத்துல மனுதர்மததுல சூத்திரன் பிராமணன் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அதேபோல பிரம்மன் நாலு வகையாக படைத்தார் என்று அதில் இருக்கின்ற விசயத்தைதான் அவர் பேசினார். இதை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாஜக ஓட்டு வங்கியை உயர்த்தப் பார்க்கிறது. இந்து மதம் குறித்து திமுகவில் இருந்தோ, திராவிட கழகத்தில் இருந்தோ அல்லது வேறு யாரோ பேசினால் கூட அதில் பாஜக அரசியல் செய்யத்தான் செய்யும்.

ஆ.ராசாவின் பேச்சு குறித்து திமுகவிடம் இருந்து எந்த கருத்தும் வரவில்லை என்றால் அவரது பேச்சை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். இதுக்கு ராசாவே பதில் சொல்லிக் கொள்வார் என்று அமைதியாக இருக்கிறார்கள், இது தொடர்பாக பாஜகவின் செயல்பாட்டை நான் அரசியலாகதான் பார்க்கிறேன். தமிழகத்தில் இன்னும் ஜாதி வேற்றுமைகள் இருக்கதான் செய்கிறது. இடஒதுக்கீட்டில் பாரபட்சம் இருக்கிறது. ஆ.ராசாவின் பேச்சு குறித்து திமுக மேல்மட்டத்தில் இருந்து யாரும் பதிலளிக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் திமுக வேறுவிதத்தில் பதில் சொல்லும்.

image

கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது. கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது. வள்ளலாருக்கு விழா எடுப்பது போன்ற பணிகளை செய்து இந்து மதத்திற்கோ, ஆன்மிகத்திற்கோ நாங்க எதிரி கிடையாது. ஆதனால் தொடர்ந்து நாங்கள் என்னென்ன ஆன்மிக பணிகளை செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்வோம். வரலாற்று பதிவுகளில் இருப்பதை ராசா பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் ஜாதி மதம் எதையும் பார்ப்பதில்லை எல்லோரும் எங்களுக்கு ஒன்றுதான் என திமுக அரசு இயங்கும். இதற்கான பதிலை இப்படிதான் சொல்வார்கள்.

ஆனால் பாஜக இதை பயன்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்கப் பார்க்கும். திமுக அறநிலையத் துறை மூலமாக திருப்பணிகளை செய்து வாக்கு வங்கியை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடும். ராசாவின் பேச்சுக்கு திமுக தலைமையில் இருந்து எந்த பதிலும் வராது. யாரும் தலையிட மாட்டார்கள். ஆனால் அவர்களின் பதில் அறநிலையத் துறை செயல்பாடு மூலமாக இருக்கும்” என்றார்.

image

இந்த சர்ச்சை இப்போது வரவில்லை பெரியார் காலத்தில் இருந்தே இருக்கிறது என பேச ஆரம்பித்தார் அரசியல் விமர்சகர் அய்யநாதன்… நாடாளுமன்ற உறுப்பினர் சொன்ன கருத்து ஒன்றும் தமிழ்நாட்டிற்கோ, வரலாறு தெரிந்தவர்களோ புதிதும் அல்ல புதுமையும் அல்ல. மனுஸ்ருதியில் பெண்களை தாழ்த்தியும், பிறப்பின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தக் கூடிய வழிகாட்டுதல் இருப்பதாக சொல்லியிருக்கிறது.

இந்த நாட்டின் சமூக அமைப்பில் இப்படிதான் இருக்க வேண்டும். இப்படிதான் வாழவேண்டும் என்ற கெடுபிடியான தத்துவத்தை மனுஸ்ருதி கொடுக்கிறது. சமூகவியல் அடிப்படையில் பார்த்தால் அதில் இருப்பது எல்லாமே எந்த காலகட்டத்திலும் மானுடத்துக்குப் பொருந்தாத ஒவ்வாத கருத்துகளாகதான் இருக்கு. பிறப்பின் அடிப்படையில் மக்களிடையே கருத்து வேறுபாட்டை புகுத்தியது மனுஸ்ருதி.

image

1925, 26 முதல் பெரியார் செய்த சுயமரியாதை இயக்க போராட்ட காலத்தில் இருந்தே மனுஸ்ருதிக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. ராசா சொன்னது ஒன்றும் புதிதல்ல. இந்த ஆதிக்க தத்துவத்தை பெரியார் முதல் அம்பேத்கர், நாராயணகுரு, ஐயா வைகுண்டர், வள்ளலார் எல்லோரும் எதிர்த்திருக்கிறார்கள். பிராமண ஆதிக்க அடிப்படையிலான ஒரு சமூகம் என்பதை அது வலியுறுத்துக்கிறது.

ஆனால், ராசா பேசியதை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களை மட்டும்தான் விமர்சிப்பார்கள். மற்றவர்களை விமர்சிக்க மாட்டார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். மனுஸ்ருதியால் பாதிக்கப்படக் கூடியவர்கள் அனைவரும் அதன் தத்துவத்தை எதிர்ப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா அரசியல் அமைப்பு சட்டப்படி உறுதிமொழி ஏற்ற அனைவரும் மனுஸ்ருதியை எதிர்க்க வேண்டும்.

இந்து என்று சொல்லும்போது நான் யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. பூனூல் போட்டிருப்பவன் என்னை விட உயர்ந்தவன், அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் பஞ்சமன் தாழ்ந்தவன், உடல் உழைப்பை தரக்கூடிய விவசாயிகள் சூத்திரர்கள். வியாபாரம் செய்பவர்கள் வைஷ்யர்கள், சத்தியர்கள் என சொன்னால் யார் ஏற்றுக் கொள்வார்கள்,

image

பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது. அவர்கள் வேதம் ஓதும் வேலையை செய்யாமல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் மற்றவர்கள் வரும்போது மனுஸ்ருதியை சொன்னால் யார் ஏற்றுக் கொள்வது. உள்ளபடியே அவர்கள் மானுட கொள்கையை சார்ந்தவர்களாக இருப்பார்களேயானால் மனுஸ்ருதியை பற்றி அவர் பேசினால் பேசிவிட்டுப் போகட்டும் என போக வேண்டியது தானே. ஏன் அவர்களால் கடந்துபோக முடியவில்லை. அப்படியொரு சமூக கட்டமைப்பைதான் உருவாக்க நினைக்கிறார்கள்.

இந்த நவீன காலகட்டத்தில் மனுஸ்ருதியில் சொல்லப்பட்டதெல்லாம் ஏற்புடையாதா என்பது தெரியாமலேயே அரசியல் செய்றாங்க. இதனால்தான் ராசாவின் பேச்சை தாங்க முடியாமல் எதிர்க்கிறார்கள். திராவிடம் என்பதே ஆரிய எதிர்ப்புதான். திராவிடம் என்ற சொல்லை ஆரிய எதிர்ப்பாகதான பெரியார் பயன்படுத்தினார். இதற்கு எப்படி திமுகவில் இருந்து கருத்து சொல்வார்கள்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.