நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் ஆடம் ஃபௌன்டைன் எனும் ஆதாம் நீரூற்று நிறுவப்பட்டது. இந்த செயற்கை நீரூற்றைச் சுற்றிலும் இருக்கும் நடைபாதையைச் சீரமைக்கும் பணியில் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பாவுத்தள கற்களை அகற்றாமல் அதன் மீது அப்படியே சிமென்ட் கலவையை கொட்டி நடைபாதை அமைத்து வந்துள்ளனர்.
மேலும் நீரூற்றின் தடுப்பு வேலிகளை மூடும் வகையிலும் நீர் வடிகால்களை முறையாக அமைக்காமல் பி.வி.சி குழாய்களை அமைத்து அவற்றின் மீதும் சிமென்ட் கலவையை கொட்டியுள்ளனர். இந்த நிலையில், இந்த பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றை தொடங்கி வைக்க வந்த ஆட்சியரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுச் செல்லப்பட்டது. உடனடியாக ஆய்வுக்கு செய்த ஆட்சியர், இந்த பணிகளை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
இது குறித்து பேசிய ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ், “நீருற்றைச் சுற்றிலும் கான்கீரிட் நடைபாதை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய நடைபாதையை அகற்றாமல் போடப்பட்ட கான்கீரிட் முழுமையாக அகற்றி விட்டு, முறையாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.
சேரிங்கிராஸ் பகுதி வணிகர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. நகரின் மையப்பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியே இந்த அளவுக்கு இருக்கிறது என்றால். மற்ற பகுதிகளின் தரம் எப்படி இருக்கும்.. மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இது போன்ற ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.