சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் சர்மா. இவர் மனைவி சீமா சர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் கீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் கீதா வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றுள்ளார். காலை 8 மணி வகுப்புக்கு அவர் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
அதனால், நான்காவது மாடியில் உள்ள தனது வகுப்புக்கு வேகமாக படிக்கட்டில் ஏறிச் சென்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வேகமாக ஏறிச் சென்ற கீதா நான்காவது மாடி படிக்கட்டில் ஏறும்போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதில் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அதே இடத்தில் மயங்கி கீழே கிடந்த அவரை காலை 8 மணி வகுப்பு முடிந்தவுடன் அந்த வழியாக வந்த பெண் பேராசிரியர் பார்த்திருக்கிறார். உடனே உடனடியாக மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்கள் உதவியுடன் மாணவி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், மாணவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வேப்பேரி போலீஸார் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். மேலும் மாணவி கீழே விழுந்ததால்தான் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமாக என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.