ஸ்லீப்ஸோ என்ற ஸ்லீப்பிங் பாட் ( sleeping pods) வசதியை சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், பயணிக்கும் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்லீப்பிங் பாட் என்று சொல்லப்படும் இந்த அறையில் படுக்கை, சார்ஜிங் வசதிகள், லக்கேஜ் வைக்கும் இடம், லைட்டுகள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு ஸ்லீப்பிங் பாட் அறையில் ஒரு நபர் மற்றும் (12 வயதுக்கு உட்பட்ட) குழந்தைகள் தங்கலாம் என்று கூறப்படுகிறது. பயணிகள் தங்களின் விமானத்திற்காகக் காத்திருக்கும்போது, இவ்வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று ஸ்லீப்ஸோவை உருவாக்கியுள்ளனர். இது போன்ற அம்சம் முதன் முதலில் ஜப்பானில்தான் அறிமுகப்படுத்தப்படுள்ளது. அவர்களின் கருத்தைப் பெற்று, இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்காக இந்த ஸ்லீப்ஸோவை உருவாகியுள்ளனர்.
அறைகள் சிறியதாக இருந்தாலும் ஒருவர் படுத்து ஓய்வெடுத்துக் கொள்வதற்கும், உறங்குவதற்கும் தேவையான வசதிகள் அதில் உள்ளன. இந்த ஸ்லீப்பிங் பாட்டில் தங்குவதற்கு பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் ஒரு மணிநேரம் தங்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “விமானத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், அவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் இந்த வசதி. ஓய்வெடுக்க பயணிகள் இனிமேல் ஹோட்டல்களைத் தேடுவதைத் தவிர்த்து விமான நிலையத்திலேயே ஓய்வெடுத்தால் நேரம் வீணாவதைத் தவிர்க்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஒரு விமானத்தில் வந்து மற்றொரு விமானத்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.