சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எம்.எல்.ஏ அசோக்குமாரின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. அதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் பெறப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. 1,200 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் என்றும், நிகழ்ச்சியில் மொய் எழுதுவதற்காக 18 இடங்களில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளிவந்தன.

தொடர்புடைய செய்தி: எம்எல்ஏ வீட்டு காதணி விழா… 1200 கிலோ கறி விருந்து.. மொய் மட்டும் இத்தனை கோடிகளா?

மொய் பணத்தை எண்ணுவதற்கு மட்டும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை விமர்சித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், `திமுக எம்.எல்.ஏ பேரப்பிள்ளைகளுக்கும் வருமான வரித்துறைக்கும் காது குத்தப்பட்டுவிட்டதா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை: “தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திமுக MLA நடத்திய மொய் விருந்தில், பதினோரு கோடி ரூபாய்க்கும் மேலே, மகசூல் அமோகம், இத்தனை பெரிய அறுவடையை நிகழ்த்திக் காட்டிய தனியார் இதுவரை யாரும் இல்லை. வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவதுதான் மொய் விருந்து. ஆனால் அதைத் தன் சுய லாபத்திற்காக 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிகன் ரோஸ்ட் என தடபுடலாக 8,000 பேருக்கும் மேலே விருந்து தூள் கிளப்ப, அசைவச் சாப்பாடும், சைவச்சாப்பாடும் பரிமாறியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அசோக் குமார்.

image

இந்த விருந்தின் சுவையான பகுதியே மொய்க்கான ஏற்பாடுகள்தான். சுமார் 40 மொய்வாங்கும் கவுண்டர்கள், கட்டுக்கட்டாக வரும் பணத்தை, கவனமாக எண்ணிப் பார்க்க, பணம் எண்ணும் இயந்திரம்! அந்தப் பணத்தை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க, வங்கி அதிகாரிகள், என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது. வியப்பளிக்கிறதா இல்லையா? மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரூ.1,000 -ல் தொடங்கி ரூ.5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர். இது சத்தியமா… சாத்தியமா…?


அங்கே நிற்கிறது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. இரண்டு லட்சத்திற்கு மேல் காசோலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிக்களை வைப்பது குற்றம், வங்கியில் ரூ.50,000/ க்கும் மேல் செலுத்த வருமானவரித்துறை கேள்வி கேட்கும். குவிந்திருக்கும் கருப்புப் பணம் வெள்ளையாக வேண்டும்…. என்று சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம்…. ஆனா அசோக் குமார் அடிச்சது, ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய். சாப்பிட்ட ஊர்காரர்கள் ஹேப்பியில்… சாப்பிடா முடியாத கருப்புப் பணமும் ஜோப்பியில்! இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமயையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் திமுகவினர்.

image

மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது. மக்களுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன், விருந்துகளையும்  மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.