நடிகை அனுஷ்காவுக்குத் தெலுங்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அறிமுகத்தை ஏற்படுத்திய படம் அருந்ததி. 2009-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், வில்லனைக் கொலை செய்ய, தன் எலும்பால் உருவாகும் ஆயுதத்துக்காக தன்னைத்தானே கொலை செய்துகொள்வார். அதன் பிறகு மறுபிறவி எடுத்து அந்த ஆயுதத்தால் வில்லனைக் கொலை செய்வார். இந்த படம் அப்போது இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதி கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத் (வயது 23). திரைப்படம் பார்ப்பதில் அதிக ஆர்வமுள்ள இவர் அவ்வப்போது பழைய திரைப்படங்களையும் பார்த்து வந்திருக்கிறார். குறிப்பாக, கடந்த சில தினங்களாக அருந்ததி திரைப்படத்தைப் பலமுறை பார்த்துள்ளார். அதில் அனுஷ்கா இறந்து மறுபிறவி எடுப்பதைப் போல தானும் இறந்து மறுபிறவி எடுப்போம் என நம்பியதாக சொல்லப்படுகிறது.
அதை அவ்வப்போது தன் குடும்பத்தாரிடமும் கூறியிருக்கிறார். எப்படியேனும் முக்தி அடைந்து மறுபிறவி எடுக்க வேண்டும் என விரும்பிய ரேணுகா பிரசாத் சாலையில், தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டிருக்கிறார். தீ உடலில் வேகமாகப் பரவியது, வலிதாங்க முடியாமல் கீழே உருண்டிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் உடனே தீயை அணைத்து தும்கூர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
60 சதவிகிதத்துக்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, தந்தையிடம் எனக்கு முக்தி கொடுங்கள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக அவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்,”எவ்வளவு கூறியும் அவர் அருந்ததி படத்தைத் திரும்ப திரும்ப பார்ப்பதை விடவில்லை. அவர் இப்படியொரு முடிவெடுப்பார் என எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.