தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் தகவல்களை அறிந்துகொள்ள உருவாக்கப்பட்ட சட்டமாகும்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள பெத்தாபூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அமிதா மிஸ்ரா என்பவர் தனது சம்பள விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி சில கேள்விகளை கேட்டிருக்கிறார். மேலும் பாவ்நகரைச் சேர்ந்த சிந்தன் மக்வானா மற்றும் அவர் மனைவி உள்ளிட்ட 9 பேர் சொந்த காரணங்களுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றனர்.
அமிதா மிஸ்ரா உட்பட 9 பேரும் தகவலுக்காக காத்திருந்த வேளையில், அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதாக்கல் செய்ய வாழ்நாள் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாகத் தகவல் தெரிவித்திருக்கும் குஜராத் தகவல் ஆணையம், “கடந்த 18 மாதங்களில் அரசு அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியை உட்பட 9 பேர், இனி வாழ்நாள் முழுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இவர்கள் இனிமேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் கேட்க முடியாது. இந்த சட்டத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.