எனது சிந்தையில் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் தூங்கியிருக்கிறேன் என எலன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வருபவர் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க். இவரது தந்தை எரோல் மஸ்க் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் ஒரு ‘தொடர் பெண் பற்றாளரா’(serial womaniser) என்ற கேள்வி எழுந்து வந்தது. தி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து எரோல் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தே மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
76 வயதான எரோல் மஸ்க், ‘’நான் ஒரு பெண் பற்றாளராகவே (Lothario) இருந்திருக்க விரும்புகிறேன். அனைத்து ஆண்களும் ஒருவரால் உண்மையாக நேசிக்கப்பட விரும்புகின்றனர் என நான் நினைக்கிறேன். ஆனால் நான் அப்படியில்லை. நான் எனது சிந்தையில் நூற்றுக்கணக்கான பெண்களுடன் தூங்கியிருக்கிறேன். எப்போதாவதுதான் என்னைக் கவரும் ஒரு பெண்ணைக் காண்கிறேன். ஆனால் நான் கிட்டத்தட்ட மூன்றுவருடங்களாக தனியாகத்தான் இருக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். மேலும், தனது மகன் எலன் மஸ்க்கும் புத்திசாலி பெண்களால் ஈர்க்கப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
எலன் மஸ்க்கின் சாதனை பற்றி கேட்கையில், ’’நான் செய்த 7 பாவங்களில் ஒன்று அது. எலன் மஸ்க்கின் சாதனைகள் குறித்து நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறுவதற்கு பதிலாக அவர் நன்றாக நிர்வாகம் செய்கிறார் என்று கூறலாம்’’ என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்னமே அவர் ஆஸ்திரேலியன் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் எலனின் சாதனைகள் குறித்து அவர் பெருமைப்படவில்லை என்று கூறியிருந்தார்.
கடந்த மாதத்தில் எரோல் அளித்த பேட்டியில் எனது விந்தணுவுக்கு அதிகளவு போட்டியுள்ளது எனக் கூறியது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு முன்னமே தனது 2வது மனைவியின் மகளிடமே அவர் குழந்தை பெற்றுள்ளது குறித்து பலரும் இன்றுவரை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.