குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் பொறுப்பான, ஒழுக்கமான அதே நேரத்தில் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டியதாகும். ஆனால் லண்டனில் உள்ள ஒரு தம்பதி தங்களுடைய குழந்தைக்கு வோட்கா ஊற்றிக் கொடுத்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

இதனையடுத்து குழந்தைக்கு வோட்கா கொடுத்து கொடுமைப்படுத்திய அந்த தம்பதியை லண்டன் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள கெண்ட் பகுதி போலீசார், “குழந்தையை கொடுமைப்படுத்திய வழக்கில், பெற்றோராக கருதப்படும் தம்பதி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக்கில் இது தொடர்பான 14 நொடிகளே கொண்ட வீடியோ வைரலானது. அதில், குழந்தையின் தாயாக இருக்கக் கூடிய பெண் ஒருவர் ஒன்றரை வயதுக் கொண்ட ஆண் குழந்தையின் தலையை சாய்த்து வோட்கா பாட்டிலில் இருந்து அதன் குப்பியில் மதுவை ஊற்றி கொடுக்கிறார்.

அந்த வீடியோவில் ஷர்ட் அணியாமல் இருந்த நபரும் உலா வந்தார். அவர் அந்த குழந்தையின் தந்தையாக இருக்கக்கூடும் என கருதுகிறோம். ஆனால் அந்த நபர் குழந்தைக்கு வோட்காதான் கொடுக்கப்படுகிறதா என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானதை அடுத்து, லண்டனின் டோவர் பகுதியில் உள்ள தொடர்புடைய முகவரிக்குச் சென்று விசாரணையை மேற்கொண்டோம்.” எனக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மிரர் செய்தி தளத்திடம் பேசிய காவல்துறை செய்தி தொடர்பாளர், “குழந்தையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் விசாரணையில் எந்த சமரசமும் மேற்கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.