நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞர் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிறிஸ்டோபரின் காதலி புற்றுநோய் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக கிறிஸ்டோபர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப்பில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என நேற்று முன்தினம் குறுந்செய்தி அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இந்து கல்லூரி அருகே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் சிக்கி உயிரிழந்ததாக கருதப்பட்டு வழக்குப் பதிவு செய்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நிலையில். இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.