விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கந்தசாமி(72), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். இவர் நேற்று பிற்பகலில் பஜாருக்கு சென்றுவிட்டு மாலையில் தனது டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வெள்ளைநிறக் காரில் மர்மகும்பல் ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. கந்தசாமி, வீட்டு வாசலில் தனது டூவீலரை நிறுத்தியவுடன் அவருக்கு பின்னால் காரில் வந்த மர்மகும்பலை சேர்ந்த மூன்றுபேர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்க கதவு வழியே தாவிக்குதித்து, அவரின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்கச்செயினை பறித்துச்சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து ஊரக காவல் நிலையத்தில் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வழிப்பறிச்சம்பவம் நடைபெற்ற லட்சுமிநகர் பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில், காரிலிருந்து குரங்கு குல்லா அணிந்தபடி 3 பேர் இறங்கி வருவதும், அதில் இரண்டுபேர் கந்தசாமியை பிடிக்க மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் செயினை பறித்துள்ளனர். அப்போது கந்தசாமிக்கும்- கொள்ளையர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் தங்கச்செயினிலிருந்து 6 பவுன் மதிப்புள்ள கொக்கியும், டாலரும் தனியே அறுந்து விழவும், கையில் சிக்கிக்கொண்ட செயினை மட்டும் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மூவரும் காரில் தப்பிச்சென்றது கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.
மேலும், போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக காரின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் தனியார் கம்பெனி விளம்பர ஸ்டிக்கர் கொண்டு மறைத்திருப்பது தெரியவந்தது. முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற செயின் 16 பவுன் எடை கொண்டது இதன்மதிப்பு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.