சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில், வேதியல் துறை பேராசிரியராகப் பணியாற்றுபவர் கோபி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும், 27 வயது மாணவி ஒருவரைக் கோபி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வுக்கட்டுரை சரிபார்க்க வேண்டும் என அழைத்திருக்கிறார்.
மாணவி முன்னெச்சரிக்கையாக தன்னுடன் உறவினர்கள் சிலரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களைப் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் பதிவாளர் குடியிருப்புக்கு வெளியே நிற்கவைத்துவிட்டு, அவர் மட்டும் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
மாணவி உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே மாணவியின் கதறல் சத்தம்கேட்டிருக்கிறது. அதையடுத்து வெளியே நின்ற உறவினர்கள் உள்ளே செல்வதற்குள் மாணவி அழுதுகொண்டே வெளியே வந்திருக்கிறார். மாணவியின் உறவினர்கள் என்ன நடந்தது? ஏன் சத்தம்போட்டாய் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு மாணவி உள்ளே நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் பேராசிரியர் கோபியைத் தாக்க முற்பட்டிருக்கின்றனர். இதில், பேராசிரியர் கோபி உடலில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து பேராசிரியர் கோபி கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் பேராசிரியர் கோபிமீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் பேராசிரியர் கோபி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவரைக் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.