தேனி மாவட்டம் தர்மாபுரி பசும்பொன் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (55). இவர் தன்னுடைய விளைநிலத்தில் நிலக்கடலை, எள், உளுந்து போன்றவை சாகுபடி செய்து வருகிறார். இதற்கிடையே ஆப் மூலம் கடந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னுடைய விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

விவசாயி

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் தங்கவேலின் போனுக்கு தொடர்பு கொண்டு தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தங்கவேலிடம் விவசாய செயலியில் அவரது விளை பொருட்களை பார்த்ததாகவும் தன்னுடைய நிறுவனத்திற்கு விளை பொருட்களை மொத்தமாக அனுப்பி வைக்கவும் கோரியுள்ளார். பொருட்கள் கிடைத்த பின்பு முழுப் பணம் அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.

இதனை நம்பிய விவசாயி தங்கவேல்,1,292 கிலோ நிலக்கடலை, 20 கிலோ எள், 20 கிலோ உளுந்து வண்டி வாடகை 1200 ரூபாய் என மொத்தம் 96 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை கோவை செட்டிபாளையத்திற்கு அனுப்பி வைத்தார். விளை பொருட்கள் வழங்கியதற்கான 96 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தங்கவேலுக்கு அனுப்பியுள்ளனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். பின்னர் தங்கவேல் விளை பொருட்களை வாங்கிய வியாபாரியை தொடர்பு கொண்ட போது அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

காஜா மைதீன்

அப்போது தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கவேல் தேனி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார், விவசாயி தங்கவேலுக்கு தொடர்பு கொண்ட போன் நம்பரை வைத்து விசாரணை செய்ததில் கோவை புளியமுத்தூர் பகுதியில் இருந்து இருவரை கைது செய்து தேனி அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

முகமது மாலிக்

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த முகமது மாலிக் (54) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த காஜா மைதீன் (44) ஆகிய இருவரும் விளை பொருட்களை வாங்குவதற்கு என நிறுவனத்தைத் தொடங்கி விவசாயியிடம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு டூவீலர்கள், 6 செல்போன்கள் மற்றும் 10 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் இருவரும், மொபைல் செயலி மூலமாக வியாபாரம் செய்யும் பல விவசாயிகளை ஏமாற்றி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.