செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கோள்களின் புதிய படங்களை சீனா வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு சீனா அனுப்பியுள்ள டியான்வென் -1 (Tianwen-1) என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் இரு துணைக் கோள்களான ஃபோபோஸ் மற்றும் டீமோஸ் ஆகியவற்றின் துல்லியமான படங்களை டியான்வென் – 1 விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் ஏவப்பட்டு 2 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, அதை நினைவு கூறும் வகையில் அவ்விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
பூமியின் துணைக்கோளான நிலவிற்கு பவுர்ணமி, அமாவாசை ஏற்படுவதைப் போல செவ்வாயின் துணைக்கோளுக்கும் பவுர்ணமி, அமாவாசை நிகழ்வுகள் ஏற்படும். பவுர்ணமி தினத்தன்று எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகத் துல்லியமாக இருக்கும் என்பதால், பவுர்ணமி நிகழும் தினத்திற்காக காத்திருந்து சீனா இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.
இப்படங்கள், துணைக்கோள்களுக்கு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இதில் துணைக் கோளின் மேற்பரப்பில் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்திற்கு பெரும் குழி ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து நகரும் வாகனத்தை (ROVER) செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யும் 3ஆவது நாடு சீனாவாகும்