மத்தியப் பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் தன்னுடைய 9 வயது வளர்ப்பு மகளின் அந்தரங்கப் பகுதியில் சூடு போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடந்த இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 40 வயது பெண், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினராவார். இவரே, இந்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். இந்த நிலையில் அந்தப் பெண், படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியின் அந்தரங்கப் பகுதியில் சூடு போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸுக்குத் தெரியவர, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்-294, 323, 324 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் அந்தப் பெண்மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் பல்லவி போர்வால், “குழந்தையின் நிலையைப் பார்க்கும்போது அவளைத் தத்தெடுத்த பெண், கொடுமையின் எல்லைகளையெல்லாம் தாண்டிய வக்கிர மனப்பான்மையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக இலகுவான பிரிவுகளின் கீழ் போலீஸ் எஃப்.ஐ.ஆர்-ஐ பதிவுசெய்துள்ளது. எனவே போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பொருத்தமான விதிகளையும், போலீஸார் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.