சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் சமீபமாக வயது வித்தியாசமின்றி ஆண், பெண் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக்கு வித் கோமாளி’யைச் சொல்லலாம்.
முதல் இரண்டு சீசன்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த வருடம் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகியது. அந்தோணி தாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, வித்யுலேகா உள்ளிட்டோர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
“ஷோ ஆரம்பிச்சதும் அந்தந்த டைமிங்கில் என்ன ஒர்க் அவுட் ஆகும்னு எங்க டீமுக்கு தோணுச்சோ அதை அப்ளை பண்ணிப் பார்த்தோம். முதல் சீசனில் ஃபர்ஸ்ட் எபிசோட் முடிஞ்சதும் எடிட்டிங் முடிச்சு அந்த ரிசல்ட்டை ஸ்கிரீனில் பார்த்தப்போ நாங்க எதிர்பார்த்திருந்த ஷோ இதுதானான்னு டிஸ்கஸ் பண்ணினோம். ஆடியன்ஸ் பார்வையில் அது எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதை அப்படியே மக்களுக்கு கொடுத்தோம். அவங்களுக்கும் அது பிடிச்சிருந்தது.. இதுக்கு பின்னாடி பலருடைய உழைப்பு இருக்கு” என நிகழ்ச்சி குறித்து 3வது சீசனின் ஒளிபரப்பு தொடங்கிய புதிதில் நம்மிடம் நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திபனும் பேசியிருந்தார்.
வழக்கம் போலவே இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது.
வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி, சந்தோஷ், கிரேஸ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி இருந்த நிலையில், கடந்த வாரம் நிகழ்ச்சியின் ஃபைனல் ஷூட்டிங் நடைபெற்றது.
இதில் மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும் நடிகையுமான ஸ்ருதிகா சிறப்பாகப் பர்ஃபார்மன்ஸ் செய்து டைட்டில் வென்றிருக்கிறார்.
நிகழ்ச்சியின் இறுதி எபிசோடு வரும் வாரம் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகுமென எதிர்பார்க்கப் படுகிறது.