இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இலங்கையின் பிரதமர் பதிவியிலிருந்து ராஜபக்சே விலகியதையடுத்து, ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். ஆனாலும், இலங்கையில் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை என நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இலங்கையில் சிறு போராட்ட தளர்வுக்குப் பிறகு, மக்கள் மீண்டும் அரசுக்கெதிராக சாலைகளில் இறங்கி போராட தொடங்கியிருக்கின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள், நேற்றைய தினம் அந்த நாட்டின் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நுழைந்தனர். உள்ளே நுழைந்தவர்கள் கண்ணில்படும் பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கி தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

இலங்கை

மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவர் இல்லத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள். இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே கடல் வழியாகக் கப்பலில் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டதாகச் செய்திகளும் வெளிவந்தன. இந்த நிலையில், அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கட்டுக் கட்டாக கோடி கணக்கில் பணத்தைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை

இது குறித்து இலங்கையின் டெய்லி மிரர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பணத்தை பாதுகாப்புப் பிரிவினரிடமே அவர்கள் ஒப்படைத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி நிலைமை மோசமடைந்துகொண்டிருக்கும் நிலையில், `நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு அனைத்து குடிமக்களும், ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையினருக்கு தங்கள் ஆதரவை வழங்குமாறு’ பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.