கேரளா மாநிலம், மூணாறு அருகே இருபது ஏக்கர்குடியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (24). இவரைக் கடந்த 2 வாரங்களாக காணவில்லை என உறவினர்கள் ராஜாக்காடு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அவர் தொடர்புடைய நபர்களிடம் விசாரித்தபோதும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

வனவிலங்கு வேட்டை

அதில் மகேந்திரன் காணாமல் போனதாகக் கூறப்படும் நாளில், ஏக்கர்குடியைச் சேர்ந்த சாம்ஜி, ஜோமி, போதமேட்டைச் சேர்ந்த முத்தையா ஆகியோருடன் மகேந்திரன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்குவது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் மூவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன.

மலைவாழ் மக்களான இவர்கள் நால்வரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு இரு வாரங்களுக்கு முன்பு, வனவிலங்குகளை வேட்டையாட நால்வரும் இரவு தோட்டப்பகுதிக்குள் சென்றுள்ளனர். சாம்ஜி, ஜோமி, முத்தையா ஆகியோர் ஒரு குழுவாகவும் மகேந்திரன் மட்டும் தனியாகவும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா என நோட்டமிட்டுள்ளனர்.

பலி

அப்போது சாம்ஜி, ஜோமி, முத்தையா ஆகியோர் டார்ச் லைட் அடித்து தேடும் போது தூரத்தில் இருந்த மகேந்திரன் அணிந்திருந்த கோட் பட்டன்கள் வனவிலங்கின் கண்கள் போல மின்னியுள்ளன. இதனால் வினவிலங்கு என நினைத்த மூவரும் மகேந்திரனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே மகேந்திரன் உயிரிழந்துள்ளார்.

அருகே சென்று பார்த்தபோதுதான் அவர்களுக்கு தாங்கள் தவறுதலாக சுட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் சேர்ந்து இச்சம்பவத்தை மறைக்க வேண்டும் எனக் கூடி பேசி, போதமேடு ஒற்றமரம் ஏலத்தோட்டத்தில் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

மூணாறு

போலீஸார் விசாரணையின்போது, சாம்ஜி, ஜோமி, முத்தையா ஆகியோர் சேர்ந்து மகேந்திரனை தேடுவது போல நடித்துள்ளனர். மகேந்திரன் காணாமல் போனதாக கூறப்பட்ட அன்று அவரைப் பார்க்கவே இல்லை என மூவரும் கூறியுள்ளனர். பலகட்ட விசாரணைக்கு பிறகு சிசிடிவி-யில் பதிவாகியிருந்த காட்சியில் அவர்கள் மகேந்திரனுடன் சேர்ந்து ஆட்டோவில் வந்திறங்கியது தெரியவந்ததைத் தொடர்ந்து தான் அவர்கள் மூவரும் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.