நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி மெயின்ரோடு ஆர்ச் பகுதியைச் சேர்ந்தவர் மதன் கார்த்திக் (வயது 38). இவர் வேளாங்கண்ணி முன்னாள் தி.மு.க., நகரக் கழக துணைச் செயலாளர். இவர் வேளாங்கண்ணி டீச்சர்ஸ் காலனி பார்வதிமந்திரம் கோயில் தெருவைச் சேர்ந்த வினோத் விக்டர் (வயது 36) என்பவருக்குச் சொந்தமான `ஏஞ்சல் ரெசிடென்சி’ என்ற விடுதியைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்திருக்கிறார். அக்ரிமெண்ட்படி குத்தகைக் காலம் ஒரு வருடம் முடிந்த பிறகு விடுதியைத் திருப்பி கேட்டிருக்கிறார் வினோத் விக்டர். மதன் கார்த்திக் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

வினோத் விக்டர்

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மதன் கார்த்திக், வினோத் விக்டர் வீட்டுக்கே சென்று அவரிடம் தகராறு செய்திருக்கிறார். வினோத் விக்டரை மதன் கார்த்திக் அடித்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த வினோத் விக்டரை அருகிலிருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபெற்றுவந்த வினோத் விக்டர் பின்னர், இரவு நாகையிலிருந்து அவர் மனைவி மரிய ரூபீனா மார்ட்டினாவுடன் காரில் வேளாங்கண்ணிக்கு வந்திருக்கிறார். காரை வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆல்வின் என்பவர் ஓட்டி வந்திருக்கிறார். கார் வேளாங்கண்ணி சுனாமி ஸ்தூபி அருகே வந்தபோது, மதன் கார்த்திக் அவரின் நண்பர் அமுதன் ஆகியோர் காரை வழிமறித்தனர். அப்போது ஒட்டுநர் ஆல்வில் காரைவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். பின்னர் மதன் கார்த்திக், அவர் நண்பர்கள் ஒருசிலர் கார் கண்ணாடியை உடைத்திருக்கின்றனர். உடனே அங்கிருந்து தப்பி வினோத் விக்டர் காரை எடுத்துக்கொண்டு வேளாங்கண்ணி சென்றிருக்கிறார்.

அப்போது மாரியம்மன் கோயில் அருகே அமுதன், மதன் கார்த்திக் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முந்திச் சென்று மீண்டும் காரை வழிமறித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த வினோத் விக்டர் காரை அமுதன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியிருக்கிறார். இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் மதன் கார்த்திக் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினார்கள். அமுதன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மதன் கார்த்தி, மரிய ரூபினா மார்டினாவை பள்ளிப் பருவத்தில் ஒருதலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இருவருக்கும் வேறு வேறு இடத்தில் திருமணமான நிலையில், மரிய ரூபினா மார்டினாவின் கணவர் வினோத் விக்டர் வேறொரு பெண்ணிடம் பழகியதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக மதன்கார்த்தியிடம் மரிய ரூபினா மார்டினா, `நீ விரும்பியபடி வாழ்ந்தால், நானும் விரும்பியபடி வாழ்கிறேன்’ எனக்கூறி அவரைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சுமார் ஓராண்டுக்குப்பிறகு இருவரும் சமரசமாகி வேளாங்கண்ணியில் மீண்டும் ஒன்று வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கப்பலுக்கு வினோத் விக்டர் வேலைக்குச் சென்றிருந்த சமயத்தில் மதன் கார்த்திக், வினோத் விக்டர் வீட்டுக்குவந்து மரிய ரூபினா மார்டினாவை அடிக்கடி சந்தித்துச் சென்றதாகத் தெரிகிறது.

மதன்கார்த்திக்

இதனை சி.சி.டி.வி கேமராவில் பார்த்த கணவர், இது குறித்து மதன்கார்த்தியிடம் கேட்க, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் வினோத் விக்டருக்கு படுகாயம் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியிருக்கிறார். வரும் வழியில் அவரைத் தீர்த்துக்கட்ட 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்வந்த காரை வழிமறித்து அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டிருந்தனர். கார் கண்ணாடியை உடைத்து தாக்கியிருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநர் தப்பிச்செல்ல, சுதாரித்துக் கொண்ட வினோத் விக்டர் காரை எடுத்து தப்பிச் சென்றிருக்கிறார். அவரைத் துரத்திச் சென்று வழி மறித்தபோதுதான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காரால் மோதியதாகக் கூறுகிறார்கள். போலீஸார் இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.