கடலூர் மாவட்டம், எம்.புதூர் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் சிறிய ஆலை ஒன்று இயங்கி வந்தது. பெரியகரைக்காடு பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில், இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் உட்பட அனைத்தும் வெடித்து சிதறியதில் அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ், பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா ஆகிய 3 பேரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சடலங்களை மீட்கும் அதிகாரிகள்

இந்த கோர விபத்து குறித்த தகவலின் பேரில் ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், அங்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீஸார், விசாரணையை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மேலும், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட அதிகாரிகள், ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் திருப்பாப்புலியூர் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு செய்தி வெளியீடு

இந்த விபத்து குறித்து கேள்வியுற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும், படுகாயமடைந்த பெண்ணுக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.