திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்கு சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செய்ததாக அவரது மாமனாரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன் முத்தரசன் (வயது 23). முத்தரசனுக்கு, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள மங்கலநாயகி புரத்தை சேர்ந்த அரவிந்தியாவிற்கும் கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டினரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 15 ஆம் தேதி மாமனார் வீட்டில் நடைபெற்ற விருந்தில், முத்தரசன் தனது மனைவியுடன் பங்கேற்று, அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மறுநாள் பார்க்கையில் புதுமாப்பிளை முத்தரசன் மாமனார் வீட்டின் அருகே ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க… ஒரு மாசம் முன்னாடிதான் கல்யாணம்.. ஆனால் 4 மாசம் கர்ப்பம்: அதிர்ந்துப்போன கணவர்!
நிகழ்விடத்திற்கு சென்ற திருத்துறைப்பூண்டி போலீஸார் முத்தரசன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், முத்தரசன் அவரது மாமனார் ரவிச்சந்திரனை பலர் முன்னிலையில் எதிர்த்து பேசியுதாகவும், இதில் ஆத்திரமடைந்த மாமனார் முத்தரசனை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீஸார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
– பாலமுருகன்