சினிமாவில் சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்துக் கொண்டே சின்னத்திரைப் பக்கம் வந்தவர், நடிகை ஜூலி. விஜய் டிவியின் ‘ஜோடி’ நிகழ்ச்சியில் உடன் ஆடிய நடிகர் சாய் சக்தியுடன் செட் ஆகாமல் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினாரே, அவர்தான். ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இன்னொரு சேனலின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டதற்காக அந்த சீரியலில் இருந்தே கழட்டி விடப்பட்டது கூட‌ நினைவிருக்கலாம்.

சீரியல் எதுவுமில்லாமல் சுமார் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தவர், சமீபத்தில்தான் ஜீ தமிழ் சேனலில் ‘சத்யா’, ‘சித்திரம் பேசுதடி’ என இரண்டு சீரியல்களில் கமிட்டாகி பழையபடி பிஸியாகத் தொடங்கினார்.

ஆனால், யார் கண் பட்டதோ அதிலும் இப்போது சிக்கல்.

ஜூலி

“‘சத்யா’ சீரியல் க்ளைமாக்ஸை நெருங்கிடுச்சு. ‘சித்திரம் பேசுதடி’ தொடரும் முடிஞ்சிடுச்சுன்னா, ‘அடுத்து என்ன’ங்கிற ஒரு கேள்வி முன்னாடி வருது. அதேநேரம் மறுபடியும் கொஞ்சம் பிரேக் எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு” என்றவரிடம் பேசினேன்.

“நடிக்கத் தொடங்கி 25 வருசம் ஆகிடுச்சு. இன்னைக்கும் நடிச்சுக்கிட்டிருக்கேன்னு சொல்றதையே ஒரு சாதனையாத்தான் பார்க்கேன். ஏன்னா, சீரியல்லாம் நாங்க வந்த காலத்துல இருந்த மாதிரி இல்லை. இன்னைக்கு நிறைய மாறிடுச்சு.

தமிழ் சீரியல்ல‌ தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு வாய்ப்புத் தர்றதில்லைங்கிற பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னொரு பக்கம் ‘அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும்’கிற பிரச்னை. சினிமாவை விட டிவியில இப்ப இது ‘ரொம்ப சாதாரணம்’கிற மாதிரி ஆகிடுச்சு.

புதுசு புதுசா நடிக்க வர்றவங்ககிட்ட ‘இதைப் பண்ணினா மட்டுமே நிறைய வாய்ப்பு கிடைக்கும்; பிரபலமாகலாம்’ங்கிற அளவுக்கு மூளைச் சலவை நடக்குது. அதனால அவங்கள்லயுமே சிலர் ‘இதெல்லாம் தப்பில்லை’ங்கிற மாதிரி நினைச்சுக்கிடறாங்க.

இன்னொரு பக்கம் இப்ப வர்ற நடிகைகளுக்கு நடிக்கவும் தெரிய மாட்டேங்குது. அட்ஜெஸ்மென்ட் பண்றதுக்கு ஓகேன்னு சொல்லிட்ட பிறகு நடிப்பு வந்தா என்ன வரலைன்னா என்னங்கிற மாதிரி போயிடுச்சு. நிலைமை ரொம்பவே மோசமாத்தான் போயிட்டிருக்கு” என்றவர்,

“நான் ஏதோ பொறாமையில புலம்பறதா நினைச்சுக்க வேண்டாம். நான் ஐம்பது படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். ‘அட்ஜஸ்ட்மென்ட்’ விஷயங்களைப் புறந்தள்ளிட்டு 25 வருஷத்தைக் கடந்து வந்துட்டேன். இதுவே என் மனசுக்கு நிறைவாத்தான் இருக்கு” என்கிறார்.

“திரும்பவும் பிரேக் எடுக்கப் போறீங்களா என்ன?” எனக் கேட்டேன்.

ஜூலி

“சேனல்களுமே இன்னைக்கு மாறிடுச்சு. முன்னாடில்லாம் ஆர்ட்டிஸ்டுகளுக்கு அங்க ஒரு மரியாதை இருந்திச்சு. இன்னைக்கு சேனல்களுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் இடையில மீடியேட்டரா சின்னச் சின்னப் பசங்க வர்றாங்க. அவங்களுக்கு ஆர்ட்டிஸ்டுகள்கிட்ட எப்படிப் பேசணும்; பழகணும்னு கூடத் தெரியறதில்லை.

ஒரு பிரபல சேனலைச் சேர்ந்த எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசர் ஒரு சீரியலுக்குக் கேக்கறப்ப எங்கிட்ட ‘இதுக்கு முன்னாடி இந்த டிவி சீரியல்ல நீங்க நடிச்சிருக்கீங்களா’னு கேக்கறார். எனக்கு சுரீர்னு கோபம் வந்திடுச்சு. ‘என் போட்டோவை உங்கம்மா கிட்டக் காட்டுங்க… அவங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருந்தா, என்னை சீரியல்ல கமிட் பண்ணுங்க, இல்லாட்டி விட்டுடுங்க’னு கோபமாச் சொல்லிட்டேன்.

நடிகர் நடிகளைக் கமிட் செய்யறப்ப அவங்க யார் என்னங்கிற விவரங்களைத் தெரிஞ்சுகிட்டுக் கூடப் பேசறதில்லைங்கிறப்ப ரொம்பவே வருத்தமா இருக்கு. இந்த மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொண்டு கட்டாயம் நடிக்கணுமான்னு நினைக்கத் தோணுமா இல்லையா? அதனால சில சமயம் மனசு பிரேக்கைத் தேடுது” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.