AICF செயலாளராக பாரத் சிங் சவுகான் பதவி வகிக்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின. அதில் ஒன்று, FIDE-இல் தலைமைப் பொறுப்பை அலங்கரிப்பதற்கு ஆனந்த்தைவிட சவுகான்தான் சரியான வேட்பாளர் என்பதுதான். இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஸ்வநாதன் ஆனந்துக்கு முழு ஆதரவை அளிப்பதாக உறுதியளித்துள்ளது அகில இந்திய செஸ் பெடரேஷன் (AICF).
அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்வு இயக்குநராக இருக்கும் சவுகான் இது குறித்துக் கூறுகையில்…
“ஆனந்த் ஒரு ஜாம்பவான், FIDE-க்காகப் பணியாற்றும் அவரது முடிவு செஸ் உலகிற்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் வரவேற்கத்தக்க வரம். நான் ஏன் அவருக்கு எதிராகக் களமிறங்க வேண்டும், எனது நோக்கம் எப்போதும் என் நாட்டில் சதுரங்க விளையாட்டின் நன்மையை ஒட்டியே அமைந்திருக்கும். நான் எப்போதும் செஸ் மற்றும் செஸ் வீரர்களுக்காகவே வாழ்கிறேன். நான் இந்த விளையாட்டில் 45 வருடங்களாக ஒரு வீரராக, பயிற்சியாளராக மற்றும் நிர்வாகியாக இருந்துவருகிறேன். எங்கள் கவனத்தை திசை திருப்பவும், நம் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் கையாளப்படும் மலிவான தந்திரம் இது. நாங்கள் ஆனந்த்தை நேசிக்கிறோம், நாங்கள் ஆனந்த்தை வணங்குகிறோம், தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்தில் ஒருவர் அவர்!” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, துணைத் தலைவராக ஆனந்த் வேட்புமனுவை ஆதரித்த முதல் கூட்டமைப்பு AICFதான் என்பதையும் சுட்டிக்காட்டினார். FIDE விதிகளின்படி, ஒரு கூட்டமைப்பு ஒரு நபரை மட்டுமே பரிந்துரைக்க முடியும். அதேபோல் எந்தச் சூழ்நிலையிலும் அதைத் திரும்பப் பெறவும் முடியாது.
ஒரு புகாரின் பேரில் டில்லி உயர் நீதிமன்றம், சில நாள்களுக்கு முன்பு சவுகானுக்கு எதிராக ஒரு தீர்ப்பைத் தாக்கல் செய்தது. அது AICF செயலாளராக அவரது செயல்பாடுகளை முடக்கியது. இருப்பினும் இது செஸ் ஒலிம்பியாட் முன்னெடுப்புகளில் எந்தத் தாக்கத்தையும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் 188 நாடுகள் பங்கேற்கும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு இது.
“வரலாறு கொஞ்சம் ஆழமானது. இது வெறும் சதுரங்கத்திற்காக அல்ல. AICF மட்டுமல்ல, நம் நாட்டின் நற்பெயரையும் கெடுக்கும் எதிரணி உறுப்பினர்களின் தந்திரம்” என்று நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செயலாளராகப் பொறுப்பேற்ற விப்னேஷ் பரத்வாஜ் இந்தச் செய்தியினை விமர்சித்தார்.
“ஒலிம்பியாட் போட்டிக்காக இந்திய அணிகள் இரண்டு கோடி ஸ்பான்சர்ஷிப் பெறுவது இதுவே முதல் முறை. எதிர்க்கட்சிகளால் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் இதுபோன்ற தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்கிறது AICF.
தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர், சவுகானைப் பாராட்டி, “கடந்த ஒன்றரை ஆண்டுகளில், செஸ் விளையாட்டில் அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் 24×7 சேவையை நான் நேரில் கண்டேன். இது AICF-ன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் சில எதிராளிகளின் அப்பட்டமான பொய்யாகும்” என்று கூறினார்.
“இந்த வதந்தியின் மூலத்தைக் கண்டறிய முயல்கிறோம், குற்றவாளியைக் கண்டுபிடித்து விரைவில் காவல்துறையில் புகார் கொடுப்போம். இப்போதைக்கு ஒலிம்பியாட் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளோம். எங்கள் குழு இதுகுறித்து 24 மணிநேரமும் வேலை செய்கிறது. இந்த மிகப்பெரிய விளையாட்டு விழாவில் தேசம் பங்கேற்க வேண்டும். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் தேசவிரோதிகள்” என்று சவுகான் கூறினார்.
தற்போது நார்வேயில் நடந்துவரும் தொடரில் விளையாடி வருகிறார் விஸ்வநாதன் ஆனந்த். புள்ளிப்பட்டியலில் மேக்னஸ் கார்ல்சன் முதலிடத்திலும், ஆனந்த் இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.