அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், ‘புதியன விரும்பு’ என்ற தலைப்பில் தமிழக அரசு முதல் முறையாக 5 நாள் பயிற்சி முகாமினை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து 11-ம் வகுப்பு பயிலும் 1,250 மாணவ மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அமைச்சர், “நமது மாணவர்கள் பள்ளி படிப்போடுச் சேர்த்து மனித உரிமைகள், தன்னம்பிக்கை, நிர்வாகத் திறமை, கலை, இலக்கியம், பெண்ணுரிமை, தனித்திறமை போன்றவற்றையும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பான இந்த 5 நாள் பயிற்சி முகாமினை கொண்டு வந்திருக்கிறது.
அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். இந்த பயிற்சி முகாமினை நல்ல முறையில் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மலை மாவட்டங்களில் இலவச பேருந்து அட்டைகளுக்கு ஏற்ப பேருந்து வசதி இல்லை என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும். பழங்குடி மாணவர்கள் கல்வி பயில தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இலவச கல்வி முழுமையாக செயல்பட்டு வருகிறது” என்றார்.