பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அண்மையில் இவர் வில்லனாக நடித்திருந்த ‘KGF-2’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் எப்போதும் தன் உணர்வுகள் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் சஞ்சய் தத், கடந்த மே 25-ல் தன் தந்தை சுனில் தத்தின் 17வது நினைவு நாளையொட்டி ‘ஒரு மகன் விரும்பக்கூடிய சிறந்த தந்தை நீங்கள். நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, மறைந்த தன் தாயார் நர்கிஸ் தத்தின் 93வது பிறந்தநாளையொட்டி நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சஞ்சய் தத்.
அதில் சஞ்சய் தத்தும் அவரின் தாயார் நர்கிஸ் தத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “உங்கள் புன்னகை என்னை வலுவாக வைத்திருந்தது, உங்கள் வார்த்தைகள் என்னை உறுதியாக நிலைநிறுத்தியது, உங்கள் ஆன்மா என்னைக் கீழிருந்து உயர்த்தியது. நான் எப்போதும் விரும்பிக் கேட்கக்கூடிய சிறந்த தாய் நீங்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் மா” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.