டெல்லியில் தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி நேற்று மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மோடி அரசு எந்த மாநிலத்திலும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளவில்லை. தெலங்கானா அமைக்க பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்திருக்கிறது. ஆனால், தெலங்கானா மாநிலம் சற்று அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. நாட்டில் செழிப்பின் ஒரு பகுதி தெலங்கானாவில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நம்புகிறார்.
தெலங்கானாவுக்குக் கடந்த 8 ஆண்டுகளில் 2.5 லட்சம் கோடியை பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிட்டிருக்கிறது. தெலங்கானா எப்போதுமே பிரதமரின் இதயத்தில் உள்ளது, ஆனால் துரதிஷ்டவசமாக, மாநிலத்திலிருந்து எங்களுக்கான ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும், அடுத்த தேர்தலில் தெலங்கான மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனப் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி,”பா.ஜ.க வெற்றிபெற்றால் தெலங்கானா மாநில மக்களின் கனவுகளை பா.ஜ.க நிறைவேற்றும். இன்று தெலங்கானா வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் தெலங்கானா வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தெலங்கானா மக்களின் கனவுகளை பா.ஜ.க நிறைவேற்றும்” எனக் குறிப்பிட்டார்.