அலகாபாத் IIIT மாணவர் ஒருவர் 1.4 கோடி ரூபாய் வருட சம்பளத்துக்கு `டெக் ஜெயன்ட்’ என அழைக்கப்படுகிற கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். லண்டனில் உள்ள கூகுள் அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றத் தேர்வாகி இருக்கும் பிரதம் பிரகாஷ் குப்தா, முதுகலை தொழில்நுட்பவியல் இறுதி ஆண்டு மாணவர். இவர் மட்டுமல்லாது இந்த வருடம் M.Tech நிறைவு செய்யும் அலகாபாத் IIIT மாணவர்கள் 100 சதவிகிதம் பேர் பெரிய நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் ஆகியுள்ளனர்.
Dremio நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் முடித்திருக்கும் பிரதம், “கடந்த சில மாதங்களாக உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து சிறந்த வாய்ப்புகள் கிடைக்குமளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. நான் கூகுளின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய படிப்பு முடிந்தவுடன் லண்டன் அலுவலகத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக சேரவிருக்கிறேன்” என LinkedIn தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அலகாபாத்தில் செயல்படும் The Indian Institute of Information Technology கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களில் பலர் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களான Amazon, Facebook, Google, Apple மற்றும் Netflix போன்றவற்றில் பணியாற்ற கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். 5 பேர் கோடிகளில் சம்பளம் பெறும் வாய்ப்பை கேம்பஸில் பெற்றிருக்கின்றனர். பிரதமுக்கு வழங்கப்பட்ட ரூ.1.4 கோடி தான் அதிகபட்ச சம்பளம் எனினும் 1.25 கோடிக்கு அனுராக் மஹதே என்கிற மாணவர் அமேசான் நிறுவனத்திலும் ரூ.1.2 கோடிக்கு அகில் சிங் என்பவர் ருபிரிக் நிறுவனத்திலும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். B.Tech மாணவர்களில் 48 சதவிகிதம் பேருக்கு பிளேஸ்மென்ட் கிடைத்திருக்கிறது.
அலகாபாத் IIIT-ல் 100 சதவிகித பிளேஸ்மென்ட் நடந்திருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.