ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பாக ஆடியிருந்தது. குறிப்பாக, 158 ரன்களை சேஸ் செய்தபோது பட்லர் மட்டும் 106 ரன்களை அடித்திருந்தார். பட்லர் ஒரே ஆளாக நின்று சேஸிங்கை முடித்துவிட்டார். ஆனால், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பட்லர் மட்டுமே காரணம் இல்லை. அவரை விட ஒருபடி அதிகமாகவே நாம் அந்த அணியின் பௌலர்களுக்கும் க்ரெடிட் கொடுக்க வேண்டும். அவர்களும் ராஜஸ்தான் அணி இவ்வளவு சிறப்பாக வெல்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

தொடர்புடைய செய்தி: ஆர்.சி.பி.யின் கோப்பை கனவை தகர்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்

போட்டிக்கு முன்பாக மேத்யூ ஹேடன் பிட்ச் ரிப்போர்ட் செய்யும்போது, ‘இது பேட்டிங்குக்கு உகந்த பிட்ச்சாகவே இருக்கும். இங்கே சராசரி ஸ்கோரே 175 தான்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 157 ரன்களை மட்டுமே எடுத்திருக்கும். அதாவது, சராசரியை விடவும் 18 ரன்களை குறைவாகவே எடுத்திருக்கும்.

image

எலிமினேட்டர் சுற்றில் லக்னோவிற்கு எதிராக 207 ரன்களை அடித்த ஒரு அணியை அடுத்த போட்டியிலேயே ஒரு மைதானத்தில் சராசரி ஸ்கோரை விட குறைவாக எடுக்க வைப்பதென்பது எவ்வளவு பெரிய விஷயம்? ராஜஸ்தான் பௌலர்கள் ரொம்பவே பிரயத்தனப்பட்டு இதை சாதித்துக் காட்டியிருந்தனர்.

ஏனெனில், ராஜஸ்தான் பௌலர்களுக்கு முந்தைய போட்டி அவ்வளவு நன்றாக அமைந்திருக்கவில்லை. முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத்துக்கு எதிராக 188 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல் ராஜஸ்தான் தோற்றிருக்கும். ராஜஸ்தானின் பௌலர்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர். குஜராத் ரொம்பவே சௌகரியமாக சேஸிங்கை முடித்திருந்தது.

அந்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுக்க ராஜஸ்தான் பௌலர்கள் எடுத்துக் கொண்டது வெறும் மூன்றே மூன்று நாட்கள்தான்.

டாஸை வென்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். தொடக்கத்திலிருந்தே ராஜஸ்தான் பௌலர் தங்களின் துல்லியமான திட்டமிட்ட தாக்குதலால் பெங்களூருவின் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைய வைக்க தொடங்கினர்.

image

போல்ட் வீசிய முதல் ஓவரில் இறங்கி வந்து ஸ்கொயரில் ஒரு மிரட்டலான சிக்சரை அடித்திருந்தாலும் பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரிலேயே கோலியின் விக்கெட்டை தூக்கிவிட்டனர். ‘கோலிக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே நான்காவது ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வீச வேண்டும். அந்த லைனில்தான் கோலி திணறிக்கொண்டிருக்கிறார்’ கமெண்ட்ரி பாக்ஸில் ஹர்ஷாவின் குரல் இப்படி ஒலித்துக் கொண்டிருக்கும்போதே பிரசித் கிருஷ்ணா அதே லைனில் ஒரு பந்தை வீசி கோலியை எட்ஜ் எடுத்திருப்பார். சாம்சன் எந்த தவறும் செய்யாமல் அதை கேட்ச் ஆக்கியிருப்பார்.

சரியான திட்டமிடலுடன் அதற்கேற்ற மிகச்சரியான ஃபீல்ட் செட்டப்களுடனும் அக்ரசிவ்வான மனநிலையுடனும் ராஜஸ்தான் கலக்கியிருந்தது. கடந்த போட்டியில் மில்லரும் ஹர்திக்கும் மட்டுமே 106 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த போட்டியில் அவ்வளவு பெரிய பார்ட்னர்ஷிப் உருவாக ராஜஸ்தான் பௌலர்கள் அனுமதிக்கவில்லையெனினும், டூப்ளெஸ்சிஸூம் ரஜத் பட்டிதருமே ஒரு 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ஆனால், இதுவுமே அவ்வளவு நிறைவான பார்ட்னர்ஷிப்பாக அமைந்திருக்கவில்லை. மெதுவாகவே ஸ்கோர் செய்திருந்தனர். மேலும், இந்த பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே பிரிப்பதற்கான வாய்ப்பும் உருவாகியிருந்தது. அதை ரியான் பராக் கேட்ச் ட்ராப் மூலம் கோட்டைவிட்டிருப்பார்.

image

இதே மாதிரியான சின்ன சறுக்கல்கள் ஆங்காங்கே இருந்தாலும் ஒட்டுமொத்தமாக தங்களின் அக்ரசிவ் அணுகுமுறையிலிருந்து சாம்சனும் ராஜஸ்தானும் பௌலர்களும் பின்வாங்கவே இல்லை. பவர்ப்ளேயில் 6 ஓவர்களையும் பிரசித் கிருஷ்ணாவும் ட்ரெண்ட் போல்டும் மட்டுமே வீசியிருந்தனர். இரண்டு ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்திருந்தனர். இந்த அக்ரசிவ் அணுகுமுறை கடைசி வரைக்குமே தொடர்ந்தது. தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கில் இருக்க சஹால் 17 வது ஓவரை வீசும்போது அப்போதும் ஒரு ஸ்லிப்பை வைத்தே சாம்சன் அட்டாக் செய்திருப்பார். ஏற்கனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறும் தினேஷ் கார்த்திக்கை இந்த மூவ் மூலம் மேலும் இறுக்கமடைய செய்திருப்பார்.

கொஞ்ச நேரம் நின்று ஆடிய டூப்ளெஸ்சிஸை மெக்காயை வைத்து சாம்சன் வீழ்த்தியிருப்பார். இந்த ஓவரில் அஷ்வினை ஷார்ட் தேர்டுமேனில் ஒயிடாக இல்லாமல் கொஞ்சம் பக்கத்தில் நிற்க வைத்திருப்பார். இந்த ஃபீல்ட் செட்டப்புக்கேற்ப மெக்காய் வீச முதலில் ரஜத் பட்டிதர் ஒரு பந்தை அடித்த ஒரு ஷாட் அஷ்வினின் கையில் சிக்காமல் நெருக்கமாக விலகி பவுண்டரியாகியிருக்கும். சரியான திட்டம், அதை சரியாக செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அது கைகூடாமல் போனது. ஆனால், அதே ஓவரில் பெரிய திமிங்கலமான டூப்ளெஸ்சிஸ் இதில் சிக்கினார். எட்ஜ் ஆகி அந்த தேர்டு மேனில் நின்ற அஷ்வினிடமே கேட்ச் ஆனார்.

image

மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும்போது ட்ரெண்ட் போல்டின் கையில் சாம்சன் பந்தை கொடுத்திருப்பார். அதுவரை வட்டத்திற்குள் நின்ற ஃபைன் லெக்கை மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்கிற்கு வந்த சமயத்தில் எல்லைக்கோட்டுக்கு அருகே சாம்சன் அனுப்பியிருப்பார். இப்போது போல்ட் பந்து வீச மூன்று டாட்களை ஆடிய மேக்ஸ்வெல் நான்காவதாக வீசப்பட்ட ஒரு ஷார்ட் பாலை அடித்தே ஆக வேண்டும் என்கிற மனநிலையில் எசகுபிசகாக அடித்து, அந்த ஃபைன் லெக் ஃபீல்டரிடமே கேட்ச் கொடுத்திருப்பார்.

கடந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு 84 ரன்களை சேர்த்திருந்தது. இந்த போட்டியில் அதே அணி அதே டெத் ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. பௌலர்களுக்கும் கேப்டன் சாம்சனுக்கும் இடையிலான ஒருங்கிணைவு அவ்வளவு கச்சிதமாக இருந்தது. அதனால்தான், ராஜஸ்தானின் தீட்டியிருந்த திட்டங்களில் பெரும்பாலானவை வெற்றியை மட்டுமே கொடுத்தது.

image

மெக்காய், போல்ட், பிரசித் கிருஷ்ணா மூவரும் இணைந்து கடந்த போட்டியில் 11.3 ஓவர்களை வீசி 118 ரன்களை கொடுத்திருந்தனர். 2 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தனர். இந்த போட்டியில் அதே மூவர் 12 ஓவர்களை முழுமையாக வீசி 73 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். கடந்த போட்டியின் கடைசி ஓவரில் மில்லரிடம் தொடர்ந்து மூன்று சிக்சர்களை வாங்கியிருந்த பிரசித் கிருஷ்ணா இந்த போட்டியில் 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து கோலி, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போல்ட், மெக்காய் போன்றோரும் கடந்த போட்டியை சிறப்பாக வீசியிருந்தனர். 

இவர்கள் பெங்களூருவை 157 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதுதான் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தைரியத்தை கொடுத்தது. எந்த அழுத்தமுமின்றி துணிச்சலாக அட்டாக் செய்து ஆடலாம் என்கிற லைசன்சை கொடுத்தது. விளைவு, பட்லர் சதமடித்தார். ராஜஸ்தான் வென்றது. 2008 க்கு பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

-உ.ஸ்ரீராம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.