பிரதமர் மோடி சென்னை விசிட்: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ஆளுநர் ஆர்.என் ரவி ட்வீட்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரின் துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர்” என ட்வீட் செய்திருக்கிறார்.
தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று சென்னையில் மோடியின் வருகை குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடிக்கு வரவேற்பு…!
இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு சென்று, பின் சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்கிறார்.
சென்னையில் தமிழக பாஜக சார்பில் மோடியை வரவேற்று பல்வேறு இடங்கள் பதாகைகளும், கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சென்னை விசிட்!
தமிழ்நாட்டில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடியும், முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் ஒரே மேடையில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். சென்னையில் சுமார் 22,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது!