கடன் வாங்கவே யோசித்த காலம் போய் இன்று எல்லாமே கடனில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று இயல்பாக சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம்.
வீட்டுக் கடன், கார் கடன், தொழில் கடன், தனிநபர் கடன் மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு கடனும் மக்களைப் பிடித்து ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியர்கள் கிரெடிட் கார்டில் செலவு செய்த தொகை ரூ.1.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 48 சதவிகிதம் அதிகமாக கிரெடிட் கார்டில் செலவு செய்துள்ளார்கள்.
கிரெடிட் கார்டு செலவு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்திருப்பது இது இரண்டாம் முறை. இதற்கு முன்பு அக்டோபர் 2021ல் கிரெடிட் கார்டில் செலவு செய்தது ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது
அதேபோல் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 19 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது மார்ச் 2022 நிலவரப்படி இந்தியாவில் மொத்தமாக 7.63 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
கொரோனா காலத்தில் வருவாய் குறைவு, வேலை இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் நுகர்வு குறைந்திருந்தது. தற்போது நுகர்வு அதிகரித்திருப்பதையே கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு காட்டுகிறது.
கிரெடிட் கார்டு வணிகத்தில் முன்னிலையில் உள்ளது ஹெச்டிஎஃப்சி வங்கி. பிப்ரவரியில் இதன் சந்தை பங்களிப்பு 25.7 சதவிகிதமாக இருந்தது மார்ச் மாதத்தில் 26.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி 19.4 சதவிகிதமும், எஸ்பிஐ 19.1 சதவிகிதமும் கிரெடிட் கார்டு வணிகப் பங்களிப்பை கொண்டுள்ளன.
மாத ஊதியம் வாங்குகிற, தொழில் செய்கிற அனைவருக்குமே கிரெடிட் கார்டு வழங்குவதில் வங்கிகள் தீவிரமாக உள்ளன. சில வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் கிரெடிட் கார்டு வணிகத்தில் தீவிரமாக உள்ளன. ஆனால் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பதை வங்கித் துறையினர் பாசிட்டிவாகப் பார்த்தாலும், பொருளாதார நிபுணர்கள், நிதி ஆலோசகர்கள் இதனால் சில நெகட்டிவ் விளைவுகளும் உண்டாகும் என எச்சரிக்கின்றனர்.
கிரெடிட் வழங்குவதில் திருப்பிச் செலுத்தும் தகுதியை நிர்ணயப்பதில் சிக்கல்கள் உள்ளன. மாத வருமானத்தைப் பல மடங்கு அதிகமாக கிரெடிட் வசதியை வழங்குவதால், பட்ஜெட்டுக்குள் செலவுகளை வைத்திருக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தேவையற்ற பொருட்களை, சேவைகளை கிரெடிட் கார்டில் வாங்கி கடனாளிகளாகிறார்கள். பின்னர் அதை திருப்பி செலுத்துவதற்காகவே காலமெல்லாம் சம்பாதிக்க வேண்டிய நிலையும் சிலருக்கு உண்டாகிவிடுகிறது. எனவே கிரெடிட் கார்டு பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது.
கிரெடிட் கார்டு… சில டிப்ஸ்!
1. கிரெடிட் கார்டு விவரங்களை, ஓடிபி, பின் நம்பர் போன்றவற்றை யாரிடமும் பகிரக் கூடாது. கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது அவசரகதியில் இருக்காதீர்கள். யாருக்கும் தெரியாத வகையில், பொறுமையாக பயன்படுத்துங்கள்.
2. இணையதளம், மொபைல் ஆப் போன்றவற்றில் கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். பில் தொகை எவ்வளவு என்பதை பாருங்கள். விவரங்களை சேமித்து வைக்காதீர்கள்.
3. கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி அதன் கிரெடிட் வரம்பை உங்களின் தற்போதைய வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்மானிக்கிறது. இந்த வரம்பு முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டை நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாகப் பயன்படுத்தலாம். சரியாக பில் தேதியில் அந்தத் தொகையைச் செலுத்திவிடுங்கள்.
4. மினிமம் ட்யூ என்கிற வசதியைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். இருப்பதிலேயே அதிக வட்டி பிடித்தம் செய்யப்படும் கடன் கிரெடிட் கார்டு கடன்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. ஓவர் லிமிட் என்கிற கடன் வரம்பை விட 10 சதவிகிதம் கூடுதலாகச் செலவு செய்துகொள்ள கிரெடிட் கார்டுகள் அனுமதிக்கின்றன. ஆனால் ஓவர் லிமிட் நிலைக்கு ஒருபோதும் செல்லாதீர்கள்.
6. கிரெடிட் கார்டை உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டுக்குள் மட்டுமே, சரியான முறையில் பயன்படுத்துங்கள். அதற்கு மேல் பயன்படுத்தினால் சுமை அதிகரித்து ஒருகட்டத்தில் அவசர காலத்தில் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது.
கூடுதல் கட்டணம், தேவையில்லாத அதிக வட்டி, பில் தேதியில் கட்டணத்தை செலுத்த தவறினால் அபராதம், கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.