உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன ஒலிபெருக்கி அமைப்பாளர் நான்கு நாட்களுக்குப் பிறகு உடல் அழுகிய நிலையில் கோவில் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையைச் சேர்ந்தவர் கெங்கமுத்து. 35 வயதான இவர் ஒலிபெருக்கி அமைப்பாளராக வேலைபார்த்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் உள்ள கெங்கமுத்துவை கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து அவரது மனைவி சரிதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள அக்னி காளி கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பக்தர்கள் குவிந்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டனர். பார்த்தபோது இறந்து கிடந்த நபர் கெங்கமுத்து என்பதும் அவரின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கெங்கமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறந்து கிடந்த கெங்கமுத்துவின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரேனும் அடித்துக் கொலைசெய்து, உடலை கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.