சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பகுதியிலிருந்து துரைப்பாக்கம் செல்லலும் ரேடியல் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை செய்துவருகிறது. டெண்டரை எடுத்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த சில மாதங்களாக இந்த பணியினை மேற்கொண்டு வருகிறது. சாலைகள் அகலப்படுத்தும் பணியுடன், சாலையின் ஓரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குரோம்பேட்டை அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் சில வடமாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் ஈடுபட்டிருந்தனர். மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டிய குழியில் இறங்கி கம்பி கட்டும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது.
மழை காரணமாக ஈரமாக இருந்த மண் திடீரென சரிந்து அவர்மேல் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மண்ணில் சிக்கிய அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அரைமணி நேரத் தொடர் போராட்டத்துக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டார். ஆனால், மண்சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவமறிந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த போலீஸார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார்கள். மேலும், அந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.