மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரிழந்தூர் சிவன்கோவில் வடக்குவீதியைச் சோந்தவர் அர்ஜுணன் (வயது 60). இவருக்கு இரத்தப் புற்றுநோய் உள்ளது, மாதத்துக்கு இருமுறை அடையாறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுவருபவர். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் ஜெயவசந்தன் நாம் தமிழர் கட்சியில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இளைய மகன் ஜெயசீலன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

அர்ஜுணன்

ஜெயசீலனுக்கும், அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குத்தாலம் போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே ஜெயசீலன், மணிகண்டன் கடையில் கள்ளநோட்டு வைத்துவிட்டு சென்றதாக வந்த புகாரின் பேரில் போலீஸார் ஜெயசீலன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்குமுன் ஜெயசீலனை பிடிப்பதற்காக சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர், ஜெயசீலன் எங்கே என்று கேட்டு தந்தை அர்ஜுனனை தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மனஉளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அர்ஜூனன், பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக் கிடங்கில் வைக்கப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த அர்ஜுணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நாம்தமிழர் கட்சியினர் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக இரு டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், “அர்ஜுணன் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், ஜெயசீலன் வழக்குகளை வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு அர்ஜுணன் உடலை பெற்றுச்சென்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.