தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டை நிறைவு செய்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த ஓராண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளும் சறுக்கல்களும் இன்றைய தினத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் கல்வி துறையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்து துறை சார்ந்த மற்றும் அரசியல் களத்தில் உள்ளவர்களிடம் கேட்டறிந்தோம்.

பேராசிரியர் சிவகுமார்:

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களுள் ஒன்று இல்லம் தேடிக் கல்வி. அத்திட்டத்தை பொறுத்தரையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் இல்லாமல் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்துவது சரியல்ல. அந்த தன்னார்வலர்கள் அரசின் சமூக நீதி கொள்கையை கடைபிடிக்க கூடியவர்களாக இல்லாமல் மறைமுகமாக ஹிந்துத்துவ கருத்துக்களை திணிப்பவர்களாக இருந்தால் அவர்களை கண்காணிப்பது யார். இதே பள்ளிக்கல்வி மேலாண்மைக் குழுவை அமைத்தது மிக அருமையான ஒன்று. பல நல்ல மாற்றங்களை நிச்சயம் கொண்டு வரும். அது வரவேற்க வேண்டிய விஷயமாகும்.

பேராசிரியர் சிவகுமார்

இன்றைக்குக் கூட சில திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர். நம் மாநிலத்தின் மதிய உணவுத் திட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. தற்போது மாணவர்களுக்குக் கூடுதலாகக் காலை சிற்றுண்டியும் சேர்த்து வழங்குவது இன்னும் சிறப்பு. ஏனென்றால் எனக்கு தெரிந்தே பல மாணவர்கள் சரியான காலை உணவு இல்லாமல்தான் பள்ளிக்கு வருகிறார்கள். இதை மிக விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.

இன்னொரு திட்டமாக தகைசால் பள்ளிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் ஓராசிரியர் பள்ளிகளை இல்லாமல் செய்யும் திட்டமும் அறிவிக்கப்படும் என்று நான் எதிர்பாத்தேன். ஏனென்றால் ஐந்து வகுப்புகள் கொண்ட பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரால் நிர்வகிக்கப்படும் நிலை இன்றும் உள்ளது. அது மிக விரைவாக மாற்றப்பட வேண்டும். அதேபோல அரசு பள்ளிகளுக்குத் தனியே துப்புரவு தொழிலாளர்கள் இல்லை. இவ்வேலைகளுக்கு அவர்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். கான்ட்ராக்ட் அல்லது தனியார் நிறுவனகளைச் சார்ந்திருக்காமல் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மிக குறைவான சம்பளமே வாங்குகிறார்கள். அவர்களின் வேலையும் நிரந்தமாக இல்லை. எனவே சுயநிதி கல்லூரிகளில் பணியாற்ற கூடிவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வைகைச்செல்வன், அதிமுக.

வைகைச்செல்வன்

தற்போதுள்ள சூழலில் ஆசிரியர்களுக்கான பணிச்சுமையும் அதிகரித்துவிட்டது, மாணவர்கான மனச்சுமையும் அதிகரித்துவிட்டது. எந்த பிரச்சனை எப்போது எந்த ரூபத்தில் வரும் என்ற அச்சத்திலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும் மாணவர்களை வழிநடத்துவதில், அறிவுறுத்துவதில் ஆசிரியர்கள் ஒருவித சுதந்திரயின்மையோடு இருக்கிறார்கள். திமுக அரசின் முக்கிய திட்டமான இல்லம் தேடி கல்வி இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. முதியோர் கல்வியும் இல்லம் தேடி கல்வியும் ஒன்றுதான். பள்ளிக்கூட தேடி வரும் கல்வியே கேள்விக்குறியாக இருக்கும் போது இல்லம் தேடி வரும் கல்வி எப்படி இனிமையாக அமையும் என்பதே என் கேள்வி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.