விடியற்காலை 6 மணிக்கு வர வேண்டிய பந்தயத்திற்கு சாவகாசமாக சாயங்காலம் 6 மணிக்கு வந்த கதையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். எப்போது வந்தால் என்ன, ஆட்டத்திற்கு வருகிறார்களே அதுவே போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால் குஜராத்திற்கு எதிரான மும்பையின் இந்த வெற்றி கொண்டாடத்தக்கதாகவே மாறியிருக்கிறது.

Hardik Pandya – Rohit Sharma

போட்டியை மும்பை வென்றாலும் போட்டிக்கு முன்பான டாஸை குஜராத்தான் வென்றிருந்தது. டார்கெட்டை சேஸ் செய்யப்போவதாக ஹர்திக் பாண்டியா அறிவித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அடுத்தடுத்த தோல்விகளும் ஏமாற்றங்களும் சேர்ந்து மும்பை அணியை ரொம்பவே துவண்டு போகச் செய்திருந்தது. இந்நிலையில் கடைசியாக ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி பதிவு செய்த அந்த முதல் வெற்றி, அணிக்குள் ஒரு பயங்கரமான நேர்மறையான தாக்கத்தை பரவ செய்கிறது.

Rohit Sharma

மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் இன்றைய ஆட்டத்திலேயே இதை உணர முடிந்தது. எந்தச் சுமையுமின்றி ரொம்பவே இலகுவாக காற்றில் பறப்பதை போன்று சிறப்பாக ஆடியிருந்தார். 28 பந்துகளில் 43 ரன்களை அடித்திருந்தார்.

அல்சாரி ஜோசப் வீசிய இரண்டாவது ஓவரிலிருந்தே அதிரடியைத் தொடங்கிவிட்டார் ரோஹித். அந்த ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 16 ரன்கள் வந்திருந்தன. கவர் ஃபீல்டரின் தலைக்கு மேல் பவுண்டரி, லெக் சைடில் மடக்கி ஒரு சிக்ஸர் என அடித்த ஷாட்கள் அத்தனையும் 100% துல்லியத்தன்மையோடு அடிக்கப்பட்டவை. அடுத்த ஓவரிலேயே ஷமி கொஞ்சம் ஷார்ட்டாக வீசியிருந்த பந்தை இலகுவாக ஃபைன் லெக்கில் மடக்கி சிக்ஸராக்கியிருப்பார். ரோஹித் நல்ல டச்சில் பெரிய இன்னிங்ஸை ஆடப்போவதற்கான அறிகுறி போன்று இந்த ஷாட் இருந்தது. ஆனாலும், ரோஹித் நீண்ட நேரம் நிற்கவில்லை. 43 ரன்களில் ரஷீத்கானின் பந்தில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு முயன்று lbw ஆனார். ரோஹித்தின் அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி பவர்ப்ளேயில் மட்டும் 63 ரன்களைச் சேர்த்திருந்தது. ரன்ரேட் 10 க்கும் மேல் சென்று கொண்டிருந்தது.

ஆனால், இதே வேகத்தில் தொடர்ந்து ரன்விகிதம் மேலே ஏறி செல்லவில்லை.

Pollard

7-15 மிடில் ஓவர்களில் மும்பை கொஞ்சம் கடுமையாகவே தடுமாறியது. இந்த 9 ஓவர்களில் மும்பை அணியால் 57 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 4 விக்கெட்டுகளையும் விட்டிருந்தனர்.

ரோஹித் சர்மாவுடன் நன்றாக தொடங்கி கூடுதலாக கொஞ்ச நேரம் நின்ற இஷன் கிஷன் 45 ரன்களில் அல்சாரி ஜோசப்பின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். நம்பர் 3 இல் வந்திருந்த சூர்யகுமார் யாதவ், ரோஹித் விட்டு சென்ற டெம்போவைக் குறைக்காமல் ஆட முயன்று பிரதீப் சங்க்வானின் பந்தில் அவுட் ஆனார். பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது பொல்லார்ட்தான். 14 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். ரஷீத்கானுக்கு எதிராக நான்கு பந்துகளில் உருண்டு புரண்டு தட்டுத்தடுமாறி ஐந்தாவது பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தொடர்ச்சியாக இரண்டு கூக்ளிக்களுக்குப் பிறகு, ஒரு லெக் ப்ரேக்கை வீசி பொல்லார்டை சர்ப்ரைஸாக்கி ரஷீத்கான் வீழ்த்தினார்.

பவர்ப்ளேயை போன்றே இறுதிக்கட்ட ஓவர்களும் மும்பைக்குச் சிறப்பாக அமைந்திருந்தன.

பவர்ப்ளேயில் ரோஹித் செய்ததை டெத் ஓவர்களில் டிம் டேவிட் செய்திருந்தார். 21 பந்துகளில் 44 ரன்களை அடித்திருந்தார்.

Tim David

ஷமி மற்றும் ஃபெர்குசனின் டெத் ஓவர்களில் நின்ற இடத்திலேயே நங்கூரமாக நின்று அவர்களின் தலைக்கு மேலேயே சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டிருந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 177 ரன்களை அடித்திருந்தது.

குஜராத்திற்கு டார்கெட் 178. குஜராத் சேஸிங்கை தொடங்கியது. 13வது ஓவர் வரைக்குமே மும்பைக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை. எல்லாமே குஜராத் பக்கமாகத்தான் சாதகமாக நடந்திருந்தது.

குஜராத்தின் ஓப்பனர்களான சுப்மன் கில்லும் ரித்திமான் சஹாவும் இணைந்தே முதல் விக்கெட்டுக்கு 106 ரன்களைச் சேர்த்துவிட்டனர்.

Gill – Saha

பவர்ப்ளேயில் பும்ரா, மெரிடித், முருகன் அஷ்வின் என அத்தனை பேரையும் சாஹா கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டு அடித்து வெளுத்தார். கொஞ்சம் லேட்டாக ஆரம்பித்தாலும் கில்லும் கொஞ்ச நேரத்திலேயே அட்டாக் செய்ய ஆரம்பித்து அனலாகத் தகித்தார். இந்தக் கூட்டணியே நின்று போட்டியை வென்று கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற சூழலில் முருகன் அஷ்வின் உள்ளே வந்து ஆட்டத்தை மாற்றினார். அவர் வீசிய 13வது ஓவரில் கில், சாஹா இருவருமே பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆகி வெளியேறியிருந்தனர். அதன்பிறகுதான் போட்டி மாறத் தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. நன்றாக ஷாட் ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சன் தானே ஹிட் விக்கெட் ஆகி வெளியேறியிருந்தார். நம்பிக்கையளித்துக் கொண்டிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் அவுட் ஆகி சொதப்பினார்.

இப்படியாக நகர்ந்து கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. க்ரீஸில் மில்லரும் திவேதியாவும் இருந்தனர். பெவிலியனில் ரஷீத்கான் இருந்தார். மூன்று பேருமே அபாயகரமானவர்கள். அசாத்தியங்களை நிகழ்த்தக் கூடியவர்கள். இவர்களுக்கு எதிராக பந்தை வீச வந்தவர் டேனியல் சாம்ஸ். ஏற்கெனவே, இந்த சீசனில் பேட் கம்மின்ஸால் அடித்து நொறுக்கி நூடுல்ஸ் ஆக்கப்பட்டவர். இப்போதும் போட்டி குஜராத் பக்கமாக இருப்பதாகவே தோன்றியது. ஆனால், டேனியல் சாம்ஸ் ஒரு சரியான பாடத்தைக் கற்பித்தார். வீழ்ந்தவன் எப்போதும் அப்படியே வீழ்ந்து கிடக்கமாட்டான் என்பதை நிரூபித்தார்.

Daniel Sams

இந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் மூன்றே ரன்களை மட்டும் கொடுத்து 9 ரன்களை வெற்றிகரமாக டிஃபண்ட் செய்தார். வீசியது அத்தனையும் 120 கி.மீ க்கும் குறைவான ஸ்லோவர் ஒன்கள். நினைத்த லெந்தில் ஒரு எக்ஸ்ட்ரா கூட வீசாமல் சரியாக இந்த ஓவரை வீசி முடித்தார். மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ரோஹித், சாம்ஸ் உட்பட மும்பை அணி வீரர்கள் அத்தனை பேரும் சாம்பியன் பட்டத்தை வென்றதை போல துள்ளிக்குதித்தார்கள். முந்தைய போட்டிகளில் வாங்கிய அடியையும் பெற்ற ஏமாற்றத்தையும் கொண்டாட்டத்தில் கரைக்க முனைந்தனர்.

இரண்டு மூன்று போட்டிகளுக்கு முன்பாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு விஷயத்தை பேசியிருந்தார்.

எனக் கூறியிருந்தார். குஜராத் இப்போது தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஹர்திக் பயந்ததை போல அதிர்ஷ்டம் தீர்ந்துவிட்டதோ? உஷாராகுங்க குஜராத் பாய்ஸ்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.