சாங்கியம் என்னும் இந்தத் தத்துவத்தின் மூலத்தை அளித்தவர் கபிலமுனி. சாங்கியம் என்ற சொல்லுக்கு பகுத்தறிதல், ஆராய்தல், எண்ணுதல் என்று பல்வேறு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு பொருளும் அதன் இயற்கையான குணத்திலிருந்து வளர்ச்சியடைந்து உருமாறுகிறது. ஆதியில் வணங்குதல் என்பது இயற்கையை மட்டுமே. இதனை ஏற்பவர்களும், உருவ வழிபாடுகள் ஆரம்பமான வேத காலத்துக்குப் பிறகு எதிர்ப்பவர்களும் தமக்கான வாதபிரதிவாதங்களால் சாங்கியத்தை ஏற்கவும் மறுக்கவும் ஆரம்பித்தனர்.
செவிவழிப் பாடமாக வந்த சாங்கியத்தை அளித்தவரான கபிலமுனியின் நூல் கிடைக்காதபோது, ஈஸ்வர கிருஷ்ணன் சாங்கிய காரிகையை எழுதுகிறார். அவரும் தானே இந்நூலின் ஆசிரியர் என்று கூறவில்லை. சஷ்டி தந்திரம் என்னும் நூலை பின்பற்றியே சாங்கிய காரிகைக்கு பாஷ்யம் எழுதுவதாகக் குறிப்பிடுகிறார். பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயத்துக்கு சாங்கிய யோகம் என்று பெயர். வாசஸ்பதி மிஸ்ரா அவர்களின் சாங்கிய தத்துவ கௌமுதி எனும் நூலும் சாங்கியத்துக்கான விளக்கங்கள் உள்ளன.
காலப்போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் இதற்கு விளக்கவுரை எழுதி, உருவ வழிபாடு முறை வந்தபின் ஈஸ்வர தத்துவம் சாங்கியத்துக்குள் புகுந்தது. இதற்கு ஈச்வர சாங்கியம் என்று பெயர், மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் இந்த சாங்கியமே உரைக்கப்படுகிறது. கபிலரின் சாங்கியம் உருவ வழிபாடு இல்லாத இயற்கை மட்டுமே மூலம்; அதிலிருந்து உருமாறி பல்வேறு உருவங்களைக் கொண்டு மாற்றம் ஒன்றே மாறாததாக விளக்குகிறது. ஈச்வர சாங்கியமோ இறைவன் எனும் ஒருவரை பரம்பொருளாகக் கொண்டு அவனின்றி அணுவும் அசையாது என்ற ஒரு சொல்லில் சாங்கியத்தை அடக்குகிறது.
சாங்கிய காரிகை 72 ஸ்லோகங்களைக் கொண்டது (சிலர் 73 என்று சொல்வதும் உண்டு). முதல் ஸ்லோகம் மனிதனின் துக்கங்களுக்குக் காரணம் என்ன, அவற்றைக் கண்டு களைவது எப்படி என்பதில் ஆரம்பிக்கிறது. ‘உலகில் துக்கம் என்பது ஒரு விஷயமே இல்லை; அப்படி இருந்தால் அல்லவா அதை அனுபவிக்க’ என்பதன் சாரம்சமே முதல் நான்கு வரிகள்.
துன்பம் மூன்று வகைப்படும்.
1. ஆதியாத்மிகம் – நம்மால் நமக்கு ஏற்படுவது
2. ஆதிபௌதிகம் – நம்மை சுற்றி உள்ளவர்களால் / உள்ளவற்றால் ஏற்படுவது
3. ஆதிதைவிகம் – நம் சக்திக்கு மீறிய இயற்கைச் சீற்றங்களால் ஏற்படுவது.
ஆதியாத்மிகம்
நாம் நம் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துக்கப்படுவது ஆதியாத்மிகம் எனப்படும். சரீரத்துக்கு உள்ளே இருந்து துக்கப்படும் மனரீதியான துன்பங்கள், சரீரத்தின் வெளியிலிருந்து வரும் உடல் உபாதைகள் ஆகியவற்றை சரீரம், மானச துக்கங்களாகப் பிரிக்கிறது. பதஞ்சலி முனி யோக சாஸ்திரத்தில் இந்த உபாதைகளில் இருந்து விடுபட வழிமுறையையும் கூறுகிறார்.
ஆதிபௌதிகம்
நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றவையால் ஏற்படும் துன்பங்கள். உதாரணத்துக்கு நாய் கடித்தல், கீழே விழுதல், விபத்துகள், அதனால் ஏற்படும் துன்பங்கள்
ஆதிதைவிகம்
நம்மால் கட்டுப்படுத்த முடியாத, இயற்கையான அல்லது இயற்கைக்கு மாறான துன்பங்கள். இப்போதுகூட நாம் அப்படி ஒரு காலகட்டத்தில்தான் இருக்கிறோம். உதாரணத்துக்கு கோவிட் தொற்று அதிதைவிகத்தைச் சேர்ந்தது.
சாங்கியம் வகைப்படுத்திய இந்தத் துன்பங்களை விலக்கி வைப்பது எப்படி? இது 25 வகையான தத்துவங்களுடன் வாழ்க்கை தத்துவமாக விளக்கப்படுகிறது. முக்குணங்களின் கூட்டுக் கலவையால் உருவான இந்த இயற்கையை புரிந்துகொண்டு அதன்படி நம் வாழ்க்கை முறையை அமைத்தால் இத்துன்பங்களிலிருந்து விலகல் சாத்தியமே.
25 தத்துவங்கள் எவை?
பிரக்ருதி, மூலப்ரக்ருதி, தன்மாத்ரா, மகத், புத்தி, அகங்காரம், மனஸ், மூன்று குணங்கள், மகா பூதங்கள், கர்ம இந்திரியங்கள், ஞான இந்திரியங்கள், இவை அனைத்துக்கும் காரணமான அவ்யக்தம் எனப்படும் புருஷா – மூலக்காரணி… இப்படியான 25 தத்துவங்கள் பற்றியும் அவற்றைப் பிரித்துணர்வது பற்றியும் அறிவோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.