இன்றைய திருமணங்களில் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. கலகலப்பும் ஆடம்பரமும் நிறைந்தவையாகவே இவை திட்டமிடப்படுகின்றன. திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்ச்சி என்பது மாறி ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு பார்வையில் இது ஓர் அழகியல் தன்மைகொண்ட ரசனையான விஷயமாக இருக்கிறது. நல்லதொரு வாழ்க்கையின் ஆரம்பம் கோலாகலமாகத்தானே இருக்க வேண்டும்? அது சரிதானே? ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தவற விடுகிறோம். அது என்னவென்று பார்ப்போம்.
பந்தாவாக ஆரம்பிக்கும் பந்தம்!
ஒரு குடும்பத்தில் முன்பெல்லாம் மூன்று, பிறகு இரண்டு. இப்போது ஒன்று எனக் குழந்தைகளின் எண்ணிக்கை சுருங்கியவுடனே, இப்போது குழந்தைகள் திருமணத்தை சிறப்பாக ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்கிற ஆசை பெற்றோர்களுக்கு வந்துவிட்டது. ‘எனக்கு இருப்பது ஒரு பையனும் பெண்ணும்தான். கல்யாணத்தை நல்லா செஞ்சுடணும்’ என்று சொல்வது சாதாரணமாகிவிட்டது. பத்திரிகை முதல் முதலிரவு வரை அனைத்திலும் பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். இரண்டு நாள் திருமண நிகழ்ச்சிகள் நான்கு நாட்களாக மாறிவிட்டது. விருந்து என்பதே ஒரு பொருட்காட்சி போல அத்தனை ஸ்டால்கள்… தின்பண்டங்கள், சாட், பாப்கான், பஞ்சுமிட்டாய் என களைகட்டுகின்றன. இதோடு லைவ் கவுண்டர்கள் வேறு. உணவுக் கொண்டாட்டத்தைத் தாண்டினால் விலை உயர்ந்த ஆடை, அணிகலன்கள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
கல்யாண கல்யாணக் கனவு!
இவையெல்லாம் பெற்றோர்களின் பட்டியல் என்றால் இன்றைய தலைமுறை மணப்பெண்களும் மணமகன்களும் தங்களுக்கென வைத்திருக்கும் கனவுகளில் கேண்டிட் போட்டோகிராபி, ட்ரோன் சூட், அதி நவீன ஆடைகள், ஆபரணங்கள், நடனம், டிஜே பார்ட்டி என வேறு ரகங்களில் கலர் கலரான கனவுகள். தன் திருமணம் ஒரு தேவதைக் கதை (Fairy Tale) போல நிகழ வேண்டும் என இன்றைய பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் Concept Wedding, Destination Wedding என ஏராளமான புதுமைகள் அறிமுகமாகின்றன. நல்ல விஷயம்தானே? சினிமாவில் பார்க்கும் ஹீரோ, ஹீரோயின் வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்து பார்க்கும் அழகிய தருணத்தை ஒரு வாழ்நாள் நினைவாக (Life Time Memory) ஆக மாற்றிக்கொள்தே ஒரு சுகம்தான்.
நேர வரம்பற்ற பேச்சு (Unlimited Talk Time)
திருமணத்துக்கு வரன் பார்த்தவுடன் அல்லது காதலிக்க ஆரம்பித்தவுடனே மொபைல் போனில் பேசும் நேரத்துக்கு (Sweet Nothings Talks) கால வரம்பில்லை. இருவரும் தங்கள் நல்ல பக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவோ, ஓரளவு புரிந்துகொள்வதற்காகவோ நிறைய அளவளாவுகிறார்கள். இப்படி பேசிப் பேசி ஏதோவொரு வார்த்தையை பிடித்துத் தொங்கி, இந்த நேரத்திலேயே முறிந்துபோன வெகு சில திருமணங்களும் உண்டு. ஆனால், இன்றைய சூழலில் நவீன பெற்றோர்கள் இதை வரவேற்கவே செய்கிறார்கள். பெரும்பாலும் கட்டுப்பாடுகள் விதிப்பது இல்லை. நிச்சய திருமணத்துக்கு முன் மணப்பெண்ணைக் காதலிக்கும் வாய்ப்பு ஒரு வரம்தானே?
கனவல்ல நிஜம்!
இந்த அனைத்துக் கோலாகலங்களும் நடந்தேறிய பின் நடைபெறுகிறது திருமணம் என்கிற ஒரு விழா. உண்மையில் அது ஒரு நிகழ்ச்சி மட்டுமே. இந்த விழாவுக்காக பெற்றோர்களும் மணமக்களும் செலவளிக்கும் பணம், நேரம் ஆகியவற்றைத் தாண்டி, திருமணத்துக்குப் பின் இருக்கும் நிஜ வாழ்க்கைக்கு என்ன திட்டமிடுகிறோம் என்பதுதான் கேள்வி. ‘‘என் பெண்ணுக்கு நல்ல குடும்பம், வசதியான வாழ்க்கை அமையும் என எல்லாம் விசாரித்துதானே திருமணம் செய்கிறோம்’’ என்று பெற்றோர்கள் சொல்வது நன்கு கேட்கிறது. ஆனால், அந்த நிஜ வாழ்க்கைக்கு, நீண்டகால பந்தமாக வாழ்வதற்கு உங்கள் பிள்ளைகள் மன அளவில் பக்குவமாக இருக்கிறார்களா? இதுதான் நீங்கள் உங்களுக்குள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி!
காதல் கசக்குமா?
அத்தனை கோலாகலங்களும் நடந்து முடிந்தபின், தினசரி யதார்த்த வாழ்க்கையில் ஈடுபடும்போதுதான் தம்பதிகளுக்கு கேள்விகள் எழத் தொடங்குகின்றன. ‘திருமணத்துக்கு முன் இவன் எத்தனை முறை போன் செய்தான்… இப்போது மாறிவிட்டான்’ என்றும், ‘திருமணத்துக்கு முன் எவ்வளவ்ய் அழகாக இருந்தாள்… இப்போது எப்போதும் நைட்டியோடவே இருக்கிறாள்’ என்று ஒருவரை ஒருவர் சலித்துக் கொள்வதில் தொடங்கி, காதல் சீக்கிரமே கசக்கத் தொடங்குகிறது.
பல குடும்பங்களில் திருமணமான சில மாதங்களிலேயே விரிசல் ஏற்படுவதும், சச்சரவுகள் நீடிப்பதும், அது விவாகரத்தாக மாறுவதும் இன்று மிக சகஜமாகிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் திருமண வயது மட்டுமே திருமண பந்தத்துக்கான தகுதியில்லை என்பதும், வசதியான குடும்பமும் நல்ல சம்பளம் வாங்கும் வரனுமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு போதுமானதல்ல என்பதும்தான் உண்மை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.