விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி தொல்லியல் கள ஆய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். தொல்லியல்மேடு களத்தில் அகழாய்வுப் பணிக்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுக் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தொல்லியல் ஆய்வுக் களத்தில் 75 செ.மீ. ஆழத்தில் பலவண்ணப் பாசிகள், சுடுமண்ணாலான வட்டச்சில்லுகள், சங்கு வளையல்கள், சங்கு அறுக்கப் பயன்படும் கருவிகள் கிடைத்தன. தற்போது இரண்டு குழிகளும் 1 மீட்டர் ஆழத்தைக் கடந்து அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது.
தொல்லியல் கள ஆழத்தை அதிகப்படுத்திய நிலையில் சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுடன் கூடிய அகல்விளக்கு, சிற்ப வடிவிலான விளையாட்டு பொம்மைகள் ஆகியவை கிடைத்துள்ளன.
இதுதவிர சங்கு வளையல் துண்டுகளும் சிவப்பு மணிகளும் கிடைத்துள்ளன. விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் இந்த அகழாய்வுப் பணியில் தோண்டத்தோண்ட பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்துவருவது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.