ட்விட்டர் இனி அனைவருக்கும் இலவசமாக இருக்க முடியாது என்று கூறியுள்ள எலான் மஸ்க் சில பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடர்பாகவும் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியதிலிருந்து, அந்த தளத்தின் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான அவரது திட்டங்களைச் சுற்றி நிறைய வதந்திகள் பரவின. தற்போது அவர் டிவிட்டரைப் பயன்படுத்துவதற்கு சிலருக்கு எவ்வாறு கட்டணம் விதிக்கப்படும் என்பதை இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் பெரும்பாலான பயனர்களுக்கு நிம்மதி அளிக்கும் தகவலையே அவர் வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்க் “டிவிட்டர் எப்போதும் சாதாரண பயனர்களுக்கு இலவசமாக இருக்கும், ஆனால் வணிகப் பயனர்களுக்கு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். அவர்கள் ஒரு சிறிய தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். டிவிட்டருக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. அதில் நல்ல மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன்” என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Twitter will always be free for casual users, but maybe a slight cost for commercial/government users
— Elon Musk (@elonmusk) May 3, 2022
தன்னை மிக மோசமாக விமர்சிப்பவர்கள் கூட டிவிட்டரில் தொடர்ந்து நீடிக்கலாம் என தெரிவித்துள்ள எலான் மஸ்க், அதுதான் உண்மையான கருத்து சுதந்திரம் என கூறியுள்ளார். மின்சார கார்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகள் என ஒவ்வொரு நிறுவனத்திலும் புரட்சியை ஏற்படுத்திய எலான் மஸ்க் டிவிட்டரில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்யப் போகிறார் என பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.