சீர்காழியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் கரூரில் தங்கி ஃபைனான்ஸ் தொழில் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், முனியப்பன் அவர் மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய ஐந்து பேர் அவரது ஷிஃப்ட் காரில் கரூரிலிருந்து சொந்த ஊரான சீர்காழி நோக்கிச் சென்றுள்ளனர். கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே சென்றபோது, முன்னாள் சென்ற எய்ச்சர் காரின் மீது மோதி நின்றிருக்கிறது.
அடுத்த நொடியில் பின்னால் வந்த லாரி கார்மீது மோதியது. அதில், முனியப்பன் அவர் மனைவி, தாய், மகள் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 வயது மகன் கார்முகில் படுகாயமடைந்தார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் சிறுவன் கார்முகிலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து வந்த மங்களமேடு போலீஸார், நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சாலை விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிகழ்ந்த விபத்தில் மூன்று பேரும், இன்று நிகழ்ந்த விபத்தில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.