குலசேகரபட்டினம் ஏவுதளம் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை, விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்றார். மேலும், விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளதாகவும், 36 நாடுகளுக்கு சொந்தமான 340 செயற்கை கோளை விண்ணில் நாம் ஏவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு இந்திய மாணவர்கள் தயாரித்த 75 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளதென குறிப்பிட்ட இஸ்ரோ விஞ்ஞாணி மயில்சாமி அண்ணாதுரை, நிலவும் செவ்வாயும் வெகு தூரத்தில் இல்லை, மனிதர்கள் வாழ அடுத்த வாய்ப்பாக அது இருக்கும் என கூறினார்.
நம்முடைய கல்வி உலகளாவிய தேவைகளுக்காக இருக்க வேண்டும் என்றும், கல்வி நிலையங்கள் அதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அப்போதுதான் விவசாயம் முதல் விண்வெளி வரை ஏராளமான தொழிற்வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியும் என குறிப்பிட்டார்.