இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்(Rishi Sunak) இங்கிலாந்தின் தற்போதைய நிதி அமைச்சர். இது இங்கிலாந்தின் இரண்டாவது மிக முக்கியமான அரசாங்க பதவியாகும். இங்கிலாந்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், மக்கள், நாட்டின் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான அடுத்த வேட்பாளராக ரிஷியைக் கருதுகின்றனர். இந்நிலையில் தான் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ரிஷி.

ரிஷி சுனக்: அரசியல் பயணம்

ரிஷி சுனக்கின் தந்தை இந்தியாவில் பிறந்தவர். இங்கிலாந்தில் பொது மருத்துவராகச் சேவை புரிந்தார். ரிஷி 2015-இல் முதன்முதலில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-2017 நாடாளுமன்றத்தின் போது அவர் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மேயின் இரண்டாவது பதவிக்காலத்தில் பாராளுமன்ற துணைச் செயலாளர் மட்டத்தில் பணியாற்றினார் ரிஷி. 2019 ஆம் ஆண்டில், போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ரிஷிக்குக் கருவூலத்தின் முதன்மைச் செயலர்(நிதி அமைச்சர்) பதவி வழங்கப்பட்டது. பொதுவெளியில் இவர் மீது நேர்மறையான கருத்தே இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ரிஷியின் பெயரைப் பெரிதளவில் பாதித்துள்ளது.

சர்ச்சைகள்:

1. “விலைவாசி உயர்வு நெருக்கடி”

இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு “காஸ்ட் ஆஃப் லிவிங்” என்னும் தினசரி செலவுக்கு வருமானம் ஈட்டுவதே பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது. 34%-க்கும் அதிகமான மக்கள், அதாவது கிட்டத்தட்ட 23.5 மில்லியன் பேர் இந்த ஆண்டு தினசரி செலவைக்கூடச் சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள அனைத்து குடும்பங்களில் 44% குறைந்தபட்ச வருமான தரத்தை விடக் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றன. இந்நிலையில், சுனக் தனது வசந்த கால பட்ஜெட்டில் இந்த நெருக்கடியை சமன் செய்வதற்காக எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை என்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் விலைகள் 8% வரை உயர்ந்து, எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆண்டுக்கு 2,000 யூரோ என இருமடங்காக அதிகரித்துள்ளன.

தொண்டு நிறுவனங்கள், தொழிலாளர் மற்றும் பிற நல சங்கங்கள், நிதியமைச்சர் ரிஷி சுனக், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நெருக்கடியைக் கடக்க உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

2. அக்‌ஷதா மூர்த்தி வரி சர்ச்சை:

ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பை விட அதிகம்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி பெங்களூரை தளமாகக் கொண்ட ஐடி நிறுவனத்தில் சுமார் 0.93 சதவீத உரிமை வைத்திருக்கிறார், இது தற்போதைய விலையில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்புடையது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகளில் இருந்து அவர் ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 11.56 கோடி) பெறுகிறார் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் குடியுரிமை இல்லாத நபராக இருப்பதால், இங்கிலாந்தில் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அக்‌ஷதா கூறியுள்ளார். “அக்‌ஷதா மூர்த்தி இந்தியாவின் குடிமகள்” என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தி கார்டியனிடம் தெரிவித்தார். “இந்தியா தனது குடிமக்கள் ஒரே நேரத்தில் மற்றொரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்க அனுமதிக்காது. இங்கிலாந்தில் குடியுரிமை பெறாமல் நான்-டொமிஸைல் (non-domocile) ஆக வாழ்கிறார் அக்‌ஷதா. இந்த வகையில் குடியிருப்பவர்கள் இங்கிலாந்தில் சம்பாதிப்பதற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி செலுத்தத் தேவையில்லை.

தி கார்டியனின் அறிக்கையின்படி, இன்ஃபோசிஸிடம் இருந்து அவர் இதுவரை 54.5 மில்லியன் பவுண்டுகளை வருமானம் கண்டுள்ளார். நான்-டாம் ஸ்டேடஸ் காரணமாக இங்கிலாந்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதனால் மட்டும் சுமார் 20 மில்லியன் யூரோக்கள் அக்‌ஷதா வரி செலுத்தாமல் இருந்துள்ளார். இது சட்டப்பூர்வமானதே. சுனக் 2018-இல் அமைச்சரானபோதும், ஒரு வருடத்திற்குப் பிறகு இங்கிலாந்து கருவூலத்திற்குப் பொறுப்பேற்ற பிறகும் தனது மனைவியின் வரி அந்தஸ்தை அமைச்சரவை அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தார்.

புதன்கிழமை மாலை அக்‌ஷதா `எந்த தவறும் செய்யவில்லை. அவரை ப்ரைவேட் சிட்டிசன் என்று தாக்குவது நியாயமற்றது’ என்றும் கூறினார்.

ரிஷி சுனக், பிரதமரின் ஆலோசகர்களை, மினிஸ்டரல் இன்டெரெஸ்ட்ஸ் ரிவ்யூ-வை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தான் விதிகளைப் பின்பற்றி நடந்துள்ளதை இது காண்பிக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். ரிஷியின் சொத்து மதிப்பு மற்றும் பிற அறிவிப்புகள் பிரதமரின் ஆலோசகர் லார்ட் கீட் மூலம் ஆய்வு செய்யப்படும்.

ஏற்கனவே, உக்ரைனில் நடந்த போருக்கு மத்தியில் இங்கிலாந்து மாஸ்கோ மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டிருந்த நேரத்தில், இன்ஃபோசிஸ் தொடர்ந்து ரஷ்யாவில் இயங்கியது. இது குறித்த கேள்விகளையும் சுனக் எதிர்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் விரைவில் ரஷ்யாவிலிருந்து வெளியேறப் போகிறது என்று அறிக்கைகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இனவெறி?

இங்கிலாந்தின் வணிகம், எரிசக்தி மற்றும் தூய்மையான வளர்ச்சிக்கான மாநில அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸ், “சுனக் மற்றும் அவரின் மனைவி குறிவைக்கப்பட்ட விதத்தில் ஒரு இனவெறி கூறு இருக்கலாம்” என சந்தேகம் கிளப்பினார்.

இது தொடர்பாக அவர் பிபிசியிடம் பேசுகையில், “அவர் ஒரு வெளிநாட்டவர் என்பதாலேயே வெளியிடப்படும் சில கருத்துக்கள் விரும்பத்தகாதவை ஆகிறது” என்று கூறினார்.

தி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாளராக இந்தியர்களிடமிருந்து நிதி திரட்டிய டோரி பியர் ராமி ரேஞ்சர், “சுனக் மற்றும் அவரது மனைவி மீதான தாக்குதல் அனைத்து இந்தியர்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. சமூக அளவில் பெரிய பதவிக்கு ஒருவர் எழும்போது, ​​அவரை வீழ்த்த சமூகம் விரும்புகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கடினமான பொருளாதார காலத்தில் ரிஷி எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டார் என்பதைப் பற்றி யாரும் பேசவில்லை. அவர் பொருளாதாரத் தூண்களை உறுதிப்படுத்தினார். ரிஷிதான் அமைச்சரே தவிர, அவரின் மனைவி அல்ல” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.