உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலில் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் அண்டைநாடுகளைச் சேர்ந்த பலர் உக்ரைன் மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்தவகையில் போர் சூழலில் பாதிக்கப்பட்டு காயமடைந்து வரும் உக்ரைன் மக்களை இரயில் மூலம் காப்பாற்றி சிகிச்சை அளித்து மருத்துவப் பணியில் ஈடுபட்டு வருகிறது MSF என்ற மருத்துவ தொண்டு நிறுவனம். பிப்ரவரி 24 அன்று ரஷ்யா-உக்ரைன் இடையான போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மருத்துவர்கள் மற்றும் பல நாடுகளின் மருத்துவர்கள் MSF என்ற மருத்துவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து காயமடைந்த மக்களைக் காப்பாற்றி சிகிச்சை அளித்து பாதிப்படைந்தவர்களை உக்ரைனிலிருந்து வெளியேற உதவி வருகின்றனர். இதுவரை 4 முறை இரயிலில் பயணம் செய்து பலரைக் காப்பாற்றிய இவர்கள் இப்பணியைத் தொடர மீண்டும் உக்ரைன் செல்வதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடைசியாக இவர்கள் உக்ரைன் மேற்கே உள்ள லிவிவ்(Lviv) நகரிலிருந்து 48 பேரை மீட்டுவந்தனர். அவர்களில், ‘எவென் பேரெப்பெலிட்ச்சியா (Evhen Perepelytsia)’ என்ற எலக்ட்ரீஷியன், தன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது ரஷ்யப் படையின் தாக்குதலால் தன் கால்களை இழந்தார். உதவியின்றி உயிருக்குப் போராடிய இவரை ‘MSF’ மருத்துவக் குழுவினர் காப்பற்றி அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது கூறிய எவென், ‘மோசமான நிலைகள் முடிந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார். மேலும் போர் சூழலிலிருந்து முழுமைமையாக வந்த பிறகு இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் அவரின் மனைவி யூலியா, “இனி உக்ரைன் திரும்ப மாட்டோம்” என்றும் “அவருடைய காலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை, ஆனால் நாங்கள் அவரது உயிரைக் காப்பாற்றினோம்” என்று கூறினார்.
இதுபற்றிக் கூறிய MSF ரயில் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜீன்-கிளமென்ட் கப்ரோல்(Jean-Clement Cabrol), டஜன் கணக்கான நோயாளிகளை காப்பற்றியுள்ளதாகவும் அதில் இரண்டு பேருக்கு அறுவைசிகிச்சை செய்ததாகவும் கூறினார். இவர்களில் பெரும்பாலும் முதியவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மக்களை போர் சூழலிருந்து காப்பாற்றி அழைத்துவர மற்றுமொரு இரயில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.