1972 அக்டோபர் 13…
இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய ‘சர்வைவல்’ ஸ்டோரிக்கான ஆரம்பப் புள்ளியாக இருந்த நாள். உலகின் மிக நீண்ட மலைத் தொடரான ஆண்டீஸ் மலைத் தொடருக்கு மேல், கடல் மட்டத்திலிருந்து கிட்டத் தட்ட 20,000 அடி உயரத்தில், ‘Uruguay Air Force Flight – 571’ என்ற சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
ரக்பி விளையாட்டு வீரர்கள், அவர்களது உறவினர்கள், இரண்டு பைலட்கள், விமானப் பணிப் பெண்கள் என மொத்தம் நாற்பத்தி ஐந்து பேர் அதில் இருந்தனர். சிலருக்கு அதுவே தங்கள் வாழ்வின் கடைசி நாள். சிலருக்கோ மீதம் வாழப்போகும் நாட்களின் அடையாளம். ஆனால் பாவம்…’Uruguay Old School Club Team’ என்ற அடையாளத்துடன் கலிஃபோர்னியா நோக்கி, உற்சாகமாக பறந்து கொண்டிருந்த அவர்களுக்கு அப்போது அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நேரம்: காலை 11 மணி. விமானத்தில் இருந்த ஒருவன்,’மலை மேடுகள் எல்லாம் பக்கத்தில் தெரிகிறதே…’ என அருகில் இருந்த நண்பனிடம் சொல்லி முடிப்பதற்குள், விமானத்தின் வால் பகுதி மலையின் உச்சியில் மோதியது. ஆபத்தான பகுதியை கடந்து விட்டோம் என்ற நம்பிக்கையில், பைலட் விமானத்தை கீழே இயக்க, உலகின் மோசமான வரலாறு ஒன்று உருவானது.
மோதிய வேகத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைய, அதே இடத்தில் பன்னிரண்டு பேரின் உடல்கள் சிதறின. மீதம் இருந்த முப்பத்தி மூன்று பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அதில் மருத்துவ மாணவனாக இருந்த Roberto Canessa வும் ஒருவன். சிறிய சிராய்ப்புகளுடன் உயிர் தப்பிய அவன், காயம்பட்ட மற்றவர்களுக்குத் தேவையான முதல் உதவிகளை செய்தான். என்ன நடந்தது என யூகிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. சற்று முன்பு வரை, முகம் முழுக்க சிரிப்புடன் பேசிக்கொண்டு வந்த நண்பர்கள் பிணமாகக் கிடந்தனர்.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை பனிக் கட்டிகள் மட்டுமே. எப்படியும் தங்களைக் காப்பாற்ற மீட்புப் படையினர் வருவார்கள் என்ற நம்பிக்கையில், ஒருவரையொருவர் கட்டி அணத்தபடி அன்றைய இரவைக் கடந்தனர்.
அடுத்த நாள் விடிந்தது… அதற்கடுத்த நாள் விடிந்தது… விடிந்து கொண்டே இருந்தது… ஆனால், காப்பாற்ற மட்டும் யாரும் வர இல்லை.
மைனஸ் 40 டிகிரி குளிரில் நடுங்கியபடி, விமானத்தின் மீதமிருந்த பாகங்களில் அடைந்திருந்த அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களது நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். அதுவரை வயிற்றை நிரப்பி வந்த சாக்லேட் துண்டுகளும், ஒயின் பாட்டில்களும் தீர்ந்து போக, பனிக் கட்டிகளை விழுங்க ஆரம்பித்தனர். முன்பே விறைத்துப் போயிருந்த உடலை, அது மேலும் உறுக்கியது.
விபத்து நடந்து முடிந்த நாற்பதாவது நாள். பசியும் பனியும் எஞ்சியிருந்தவர்களின் உயிரை பதம் பார்க்கத் தொடங்கியது. மரண வாசலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களிடம், ராபர்டோ கேட்ட கேள்வி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
‘நாம ஏன் பைலட்ட சாப்பிடக்கூடாது…?’
அனைவருக்கும் குமட்டிக் கொண்டு வந்தது.
‘உயிர் வாழ இதைத் தவிர வேறு வழி இல்லை. பல முறை யோசித்துவிட்டு தான் சொல்கிறேன்…’ என்றான் ராபர்டோ. ஆனால், அதை யாரும் ஏற்கவில்லை. ‘இதற்கு சாவதே மேல்…’ என்றனர்.
அடுத்த இரண்டு நாட்கள் இதைப் பற்றிய விவாதங்களே ஓட, மேலும் மூன்று பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
Roberto தீர்க்கமான பார்வையுடன்… ‘நாளை நமக்கும் இதே கதி தான். உயிர் பிழைத்திருக்க வேண்டுமெனில் நாம் இதை செய்து தான் ஆகவேண்டும்…’ என்று சொல்லிவிட்டு தயக்கமே காட்டாமல் கை கத்தி ஒன்றை எடுத்தான். மெல்ல பைலட்டின் உடல் அருகே சென்றான். பைலட்டின் வயிற்றுப் பகுதியை கிழித்த அவன், உறைந்து போயிருந்த சதையை பிய்த்து எடுத்தான்.
கண்களை மூடிக்கொண்டு, புருவங்கள் சுருங்க வெட்டியெடுத்த சதையை வாயில் போட்டு அறைத்தான்.
முன்பை விட ராபர்டோ புத்துணர்வுடன் இருப்பதைப் பார்த்த மற்றவர்களும் அதை செய்யத் துணிந்தனர். அங்கிருந்த தங்கள் நண்பர்களை (பிணங்களை) சாப்பிடத் தொடங்கினர்.
ஆனால் எத்தனை நாட்கள் இப்படி?
ராபர்டோ அங்கிருந்த திறன் வாய்ந்த 2 நண்பர்களை தேர்ந்தெடுத்தான். மூன்று பேரும் சேர்ந்து கால் போனபோக்கில் போக வேண்டும். எவ்வளவு தூரம் உடல் வலிமை இருக்கிறதோ…எவ்வளவு தூரம் மன வலிமை இருக்கிறதோ… அவ்வளவு தூரம் போக வேண்டும். போகும் வழியில் உதவி கிடைத்தால் வாழ்வு…இல்லையெனில் சாவு… இது தான் திட்டம்.
மூவரும் உடனே கிளம்பினர். போகும் வழியில் ஆற்றல் குறையாமல் இருக்க, சில சதைத் துண்டுகளை வெட்டி எடுத்துக் கொண்டான் ராபர்டோ. கடும் பனிப்பொழிவு, பனிப்பாறைகள், மூச்சை அடைக்கும் காற்றினை கிழித்துக் கொண்டு மூவரும் நடந்தனர். இரண்டு நாட்கள் இப்படி தொடர்ந்த அவர்களால், அதற்கு மேலும் நடக்க முடியும் என தோன்றவில்லை.
ராபர்டோ கீழே சரிந்தான். ஏதோ கனவுலகில் மிதப்பது போன்று இருந்தது. குடும்பத்தை நினைத்தான். நண்பர்களை நினைத்தான். கண்கள் இருண்டன. எல்லோரும் அவனருகில் நின்று சிரிப்பதைப் போன்ற மாயை உருவானது.
திடீரென… ஆற்று நீர் சல சலவென ஓடும் சத்தம் தெளிவாக கேட்டது. Roberto கண்களை திறந்தான். அப்போது அவன் கண்ட அந்தக் காட்சி, அவன் சாகும் வரையில் மறக்க வாய்ப்பில்லை.
ஆம்… எதிரே அழகான ஆற்றின் பின்புறம் சிறிய குடில்கள் இருப்பது தெரிந்தது. எழ முடியாமல் தட்டுத்தடுமாறி ஏறி, ஓஓஓவென குரல் கொடுக்க, எதிரில் நின்ற ஒரு ஆள் கவனித்து விட்டான்.
அடுத்த நாள்…
ஹெலிகாப்டர் மிக அருகே பறப்பதைப் போன்ற சத்தம் கேட்டது. உடைந்த விமானத்தினுள் இருந்து வெளியே வந்த ஒருவன், ‘There is a Helicopter to save us…’ என கத்தினான். மற்றவர்களால் இதை நம்ப முடியவில்லை. அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அழுதுகொண்டே விமானத்தை நோக்கி அவர்கள் கை அசைத்த புகைப்படம்தான் இது (ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அசல் படம்).
கிட்டத்தட்ட 70 நாட்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மனித சதையை உணவாக உண்டு, இனியும் உயிர் வாழ்வோமா என்ற சந்தேகத்தில், ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகம் போல நகர்த்திய அவர்களுக்கு… தங்களைக் காப்பாற்ற ஒரு ஹெலிகாப்டர் வந்திருக்கிறது என தெரிந்ததும் அவர்களின் மன நிலை என்னவாக இருக்கும்?
உலகம் முழுக்க அன்றைய நாள் இதுதான் தலைப்புச் செய்தி ஆனது. கூடவே மனித சதைகளை உண்டுதான் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் தொற்றிக் கொள்ள, உயிர் பிழைத்த பதினாறு பேரும் தொலைக் காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தனர். எந்த சூழ்நிலையில் அப்படி ஒரு முடிவை எடுத்தோம் என்பதை விளக்கினர். அதன்பிறகே அவர்கள் மேலிருந்த சர்ச்சை விலகியது. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சர்வைவல் ஸ்டோரியாக இன்றும் இந்த ‘Uruguay Andes Plane Crash’ பார்க்கப்படுகிறது.
ராபர்டோவுக்கு இப்போது வயது 68. உருகுவேயின் முதன்மை ‘குழந்தைகள் நல’ மருத்துவர்களுள் ஒருவர். அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர்.
‘உண்மையில் மனித சதையை சாப்பிட்டிங்களா?’
‘ஒவ்வொரு நாளும் பலரிடமிருந்து நான் எதிர் கொள்ளும் கேள்வி இது. கடந்த நாற்பது வருடங்களாக இக்கேள்விக்கு விளக்கம் அளித்து நான் சோர்ந்து விட்டேன். ஆரம்பத்தில் மிகவும் சங்கடமாக இருக்கும். ஆனால் இப்போது அந்தக் கேள்வியை எதிர் கொள்ள பழகிக் கொண்டேன்…’ – சமீபத்தில் ஒரு தொலைக் காட்சிப் பேட்டியில் ராபர்டோ சொன்ன வார்த்தைகள் இவை.
ஒரு நொடி. ஒரே ஒரு நொடி. நம் வாழ்க்கையை எந்த அளவுக்கு புரட்டிப் போடும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.
– சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.