தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கோடைக் காலத்தின் ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்து வாங்குகிறது. கடுமையான வெயிலின் காரணமாகச் சென்னையில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பிக் காணப்பட்டன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டி.எம்.சி ஆகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் இந்த ஏரிகளில் 11 டி.எம்.சி அளவுக்கு நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அடித்துவரும் அளவுக்கு அதிகமான வெயிலின் காரணமாகக் குடிநீர் ஏரிகளில் நீர் ஆவியாதல் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றைய கணக்கின்படி இந்த ஏரிகளின் நீர் கையிருப்பு 8.85 டி.எம்.சி மட்டுமே. அதுவே, கடந்த ஆண்டு இதே நாளில், இந்த ஏரிகளில் 9.37 டி.எம்.சி குடிநீர் கையிருப்பு இருந்துள்ளது. ஆவியாதலைக் கட்டுப்படுத்த ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு நீரைத் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.