கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவா மாநிலத்திலும் ஆம் ஆத்மி, இரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெனாலிம் மற்றும் வெலிமில் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் இது கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அக்கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று (மார்ச் 10) வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் சூழலில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் ஆம் ஆத்மி 2 இடத்திலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்றன.
கோவாவில் 2 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நேர்மையான அரசியல் தொடங்கியுள்ளதாக அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பஞ்சாப் தேர்தலில் படு தோல்வி – ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சரிசமமான ஆம் ஆத்மி