2019-ல் வெளியான -`காப்பான்’ படத்திற்குg; பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, வினய், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் சூர்யா ‘ஜெய்பீம்’ படத்தின்போது தனக்கு நேர்ந்த நெருக்கடிகள் குறித்தும் தனது ரசிகர்களுக்கு நேர்ந்த நெருக்கடிகள் குறித்தும் பேசினார். மேலும் அனைவரும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
‘ஜெய்பீம்’ படம் நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாகவும் சிலருக்கு இப்படம் சங்கடங்களை ஏற்படுத்தியதாகவும் கூறிய சூர்யா, இந்த சங்கடங்களை தவிர்க்க தன் தரப்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால் அதே சமயம் தனது ரசிகர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளானதாகவும் கூறிய சூர்யா இதுபோன்ற விஷயங்களை பக்குவமாகக் கையாளும் ரசிகர்கள் தான் ‘எதற்கும் துணிந்தவர்கள்’ என்று தனது ரசிகர்களை பாராட்டினார்.
மேலும் நம்முடைய பழைய மூடநம்பிக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு புது முயற்சிகள் எடுப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் ‘உங்களால் தான் நான், உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எப்போ பேச வேண்டுமோ சரியான நேரத்தில் பேசுவேன்’ என்றும் கூறியிருந்தார். இதுபோன்ற சமூக பிரச்னைகளை எதிர்கொள்வதில் நடிகர் சத்யராஜ் தனக்கு ஆதரவாக இருந்து வழிகாட்டுவதாகவும் கூறினார்.
திரையரங்கில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் திரையரங்கில் பார்ப்பதற்கான சிறந்த படமாகவும் அதே நேரத்தில் முக்கியமான பிரச்னைகளைப் பற்றி பேசும் படமாகவும் இருக்கும் என்று கூறியிருந்தார்.