20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வு விவகாரத்தில் தெளிவாக உள்ளோம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்து இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், ”டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழுவினர், அணி நிர்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருக்கிறது. அதற்கென தனி பார்முலா இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் அணி சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஏற்கெனவே உள்ள அணியை சற்று பொருத்தமானதாக மாற்றுகிறோம். ஒவ்வொரு வீரருக்குமான பணிச்சுமையை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது உள்ள வீரர்களில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்ப திறமையுடன் இருப்பவர்கள் குறித்து ஒரு தெளிவு இருக்கிறது. ஆனாலும் எல்லோருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்பை தர விரும்புகிறோம்.
20 ஓவர் போட்டி கடினமானது ஆகும். அதில் ஆடும் வீரர்களை குறுகிய காலத்தில் எடை போட இயலாது. அவர்களது ஆட்டத்தை அறிய சரியான வாய்ப்புகள் வழங்கப்படும். 20 ஓவர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் எப்போதுமே அதிரடியாக விளையாட வேண்டும். நன்றாக விளையாடியதால்தான் அவர்கள் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளனர். ஒரு தொடர், ஒரு ஆட்டத்தை கொண்டு அவர்கள் திறமையை மதிப்பிட மாட்டோம்.
நான் பல வீரர்களிடம் பல்வேறு விதமான யோசனைகளை கூறுவேன் ஆனால் அதை அனைத்தையுமே அவர்கள் எடுத்துக் கொள்வார்களா என்பது எனக்கு தெரியாது. இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். அவருக்கு பேக்கப் வீரராக கேஎஸ் பரத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். இதற்கு, இளம் வீரர்களை பயிற்றவிக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணம்தான்” என்று கூறினார்.
இதையும் படிக்க: “உலகத்திற்கு நீங்கள் கிங், ஆனால் எங்களுக்கு..” – விராட் கோலிக்கு யுவராஜ் உருக்கமான கடிதம்