‘காந்தியை ஏன் கொலை செய்தேன்’ என்ற பெயரில் 45 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய குறைந்த பட்ஜெட் படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. 2.20 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் கோட்சே கோர்ட்டில் ஆஜராகி ஏன் மகாத்மா காந்தியை கொலை செய்தேன் என்பது குறித்து வாக்குமூலம் கொடுப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இப்படத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், நடிகருமான அமோல் கோலே நடித்துள்ளார். இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமோல் கோலே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உண்மையான வாழ்க்கையையும், திரைப்பட வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read: `நான் கை தட்டவில்லை, அது எடிட்டிங்!’ – சர்ச்சையான ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடந்தது இதுதான் – அமுதவாணன்
கோட்சே வேடத்தில் அமோல் கோலே நடித்திருப்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜிதேந்திர அவாட் விமர்சனம் செய்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் அஸ்லாம் ஷேக், அமோல் கோலேக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அமோல் ஒரு நடிகர். அவருக்கு வந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். அமோல் அதிகமான டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜ், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சாம்பாஜி மகாராஜ் போன்ற டிவி தொடர்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். மராத்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அமோல் தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவில் தொடங்கினார்.
அதன் பிறகு நவநிர்மாண் சேனாவில் சிறிது காலம் இருந்தார். 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு அமோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவரை தேசியவாத காங்கிரஸ் ஷிரூர் தொகுதியில் நிறுத்தியது. இதில் அமோல் அமோக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார். ஷிரூர் தொகுதியில் சிவசேனா சார்பாக போட்டியிட்ட சிவாஜி அதல்ராவ் பாட்டீல் இத்தேர்தலில் தோல்வி அடைந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. 2019 மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் அமோல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அடுத்து நடந்த சட்டமன்றத்தேர்தலில் அமோலை தேசியவாத காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளராக பயன்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.